
‘கஷ்மே வர்தே’ என்ற இந்திப் படத்தின் கதையை தழுவி திரைக்கதை - வசனம் எழுதினார் பஞ்சு அருணாசலம். இந்தப் படத்தில் ரஜினியும், பிரபுவும் இணைந்து நடித்தனர். ரஜினிக்கு ஜோடி சுஹாசினி, பிரபுவுக்கு ஜோடி குஷ்பு. இந்தப் படத்தின் மூலம்தான், தமிழ்ப்பட உலகில் குஷ்பு அடியெடுத்து வைத்தார்.
‘குஷ்புவை தேர்வு செய்தது எப்படி? என்று கேட்டதற்கு டைரக்டர் எஸ். பி. முத்துராமன் கூறியதாவது :-
‘பிரபுவுக்கு ஜோடியாக ஒரு புது முகத்தை அறிமுகம் செய்ய தீர்மானித்தோம். அந்த சமயத்தில், குஷ்பு தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை வரவழைத்துப் பார்த்தோம். எங்கள் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று தீர்மானித்து, பிரபுவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்தோம்.
அந்த சமயத்தில் குஷ்புவுக்கு தமிழ் ஒரு வார்த்தைகூட தெரியாது. ஆனால், தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது. ஏ. வி. எம். படங்களில் நடிக்க வருகிறவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் எஸ். எல். நாராயணனைக் கொண்டு, குஷ்புவுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தோம். தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதி வைத்துக்கொண்டு பேசிப் பழகினார்.
இவ்வாறு முத்துராமன் கூறினார். இந்தப் படத்தில் ரஜினிக்கு, இரட்டை வேடம். ஒரு வேடத்தில் ஞாபக மறதி பேராசிரியராக நடித்தார். புதுமையான வேடம். ரசிகர்களை சிரிக்க வைத்த வேடம். இன்னொரு வேடத்தில், முரட்டு இளைஞனாக நடித்தார். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். பாடல்கள் இனிமையாக இருந்தன. குறிப்பாக, ‘தென் மதுரை வைகை நதி’ என்ற பாடல் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த பாடல்.

24.4.1988 ல் வெளிவந்த ‘தர்மத்தின் தலைவன்’ நூறு நாள் ஓடி வெற்றிபெற்றது. குறிப்பாக குஷ்புவுக்கு இப்படம் மிகுந்த பெயர் தேடித் தந்தது. படிப்படியாக முன்னேறி, வெகு விரைவில் தமிழ் நடிகைகளில் முதல் இடத்தைப் பிடித்தார். தன்னை அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில், முத்துராமன் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கின்றார். சமீபத்தில் ஜெயா தொலைக்கட்சியில், ‘ஜக்பொட்’ நிகழ்ச்சியில் பேசும்போது ‘டைரக்டர் எஸ். பி. முத்துராமன் என் குரு’ என்று குறிப்பிட்டார்.
இதுபற்றி முத்துராமன் கூறுகையில்:
‘குஷ்பு ஆர்வத்தினாலும் விடா முயற்சியினாலும் வெகு சீக்கிரம் தமிழ் கற்றுக்கொண்டார். அது மட்டுமின்றி, தமிழரையே திருமணம் செய்து கொண்டு, தமிழ்ப் பெண்ணாகவே மாறிவிட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டார். டைரக்டர் பாரதிராஜாவுடன் மீண்டும் ரஜினி இணைந்த படம் ‘கொடி பறக்குது’ இதற்கு முன் பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’யில் ரஜினி நடித்திருந்தார்.
ஏறத்தாழ 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா படத்தில் ரஜினி நடித்தார். மனோஜ் கிரியேஷன்ஸ் பேனரில் தயாரான இப்படத்தின் கதை - வசனத்தை ஆர். செல்வராஜ் எழுதினார்.ரஜினிக்கு ஜோடியாக அமலா நடித்தார். இப்படத்தில் டைரக்டர் மணிவண்ணன் முதல் முதலாக வில்லனாக நடித்தார். 7.11.1988 ல் வெளியான இப்படம், எதிர்பார்த்த அளவில் ஓடாவிட்டாலும், 100 நாட்களை எட்டிப் பிடித்தது.
No comments:
Post a Comment