Thursday, May 3, 2012

இரு இமயங்களுடன் இருபது வருடங்கள் புகழ்கொடி பறக்க விட்டவர்


1960 களில் இருந்து 80 வரை இருபது வருடங்கள் தமிழ் சினிமாவில் புகழ்க்கொடி பறக்க விட்டவர் கே.ஆர்.விஜயா. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இரண்டு இமயங்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 450 படங்களுக்கும் மேல் நடித்தவர் கே.ஆர். விஜயா. சென்னை தியாகராய நகர் ராமன் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் முன்பொருமுறை அவரை சந்தித்த போது....
‘1963 இல் நான் சினிமாவுக்கு வந்த போது நடிகர், நடிகைகளை ‘நட்சத்திரங்கள்’ என்றுதான் சொல்வார்கள். நடிகைகளை, சினிமா தாரகைகளாக மதித்தார்கள்.
செளகார் ஜானகி, கே.ஆர். விஜயா, சரோஜாதேவி ‘கற்பகம்’ படத்தில் நான் பாதி படம் வரைதான் வருவேன். என்றாலும் அந்தப் படம் பார்த்தவர்கள் அத்தனை பேர் மனதிலும், ‘கற்பகம்’ கதாபாத்திரம் பதிந்து விட்டது. எனக்கு ரசிகைகள் நிறைய பேர் உருவானார்கள். நிறைய ரசிகர், ரசிகைகளை நான் சந்தித்து இருந்தாலும், ஒரே ஒரு ரசிகையை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை.
‘கற்பகம்’ படம் பார்த்துவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்த அந்த ரசிகை, தனது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி, காதில் கிடந்த கம்மல், கைகளில் அணிந்திருந்த வளையல்கள் அத்தனையையும் கழற்றி கையில் வைத்துக்கொண்டு “எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
அவருடைய அன்பைப் பார்த்து நெகிழ்ந்துபோன நான், “இதெல்லாம் வேண்டாம். உங்க அன்பு போதும்” என்று அந்தப் பெண்ணின் நகைகளை மீண்டும் அவருக்கே அணிவித்தேன். “நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்....” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
பிறகு ஒருநாள் ஒரு பட்டுப்புடவையுடன் என் வீட்டுக்கு வந்தார். இதையாவது நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். வேண்டாம் என்று சொன்னால், அவர் மனம் புண்படும் என்பதற்காக அந்தப் பட்டுப்புடவையை வாங்கிக் கொண்டேன்.
எனக்கு நிறைய ரசிகைகளை உருவாக்கிக் கொடுத்த இன்னொரு படம், ‘நம்ம வீட்டு தெய்வம்’ அந்தப் படம் பார்த்துவிட்டு என்னை சந்தித்த பெண்கள் எல்லோரும், “பூஜை ரூமுக்குப் போனால், உங்க முகம்தான் தெரியுது” என்றார்கள்.
“மிருதங்க சக்ரவர்த்தி” படம் வந்த நேரத்தில், சுசீந்திரம் போய் அங்குள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தேன். யாரோ என் முதுகில் தட்டினார்கள். சாமி கூட கும்பிட விடாமல் இடையூறு செய்வது யார்? என்று திரும்பிப் பார்த்த போது ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தார்.
“மிருதங்க சக்ரவர்த்தி படம் என் வாழ்க்கையை போலவே இருக்கிறது. எங்க வீட்டுக்காரர் ஒரு மிருதங்க கலைஞர். நான் பாடகி. எங்கள் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் படத்தில் உள்ளன” என்றார். அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்.
எனக்கு பாராட்டு வாங்கி கொடுத்த இன்னொரு படம், ‘இதயக்கமலம்’ அந்தப் படம் பார்த்துவிட்டு “எங்கள் வீட்டுக்கு உங்களைப்போல் ஒரு மருமகள் வரவேண்டும்” என்று பல வயதான பெண்கள் பாராட்டினார்கள்.
அந்த காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் “நட்சத்திரங்களாக” மதிக்கப்பட்டதற்கு எம்.ஜி.ஆரும், சிவாஜியும்தான் காரணம். எம்.ஜி.ஆருடன் நான் சுமார் பத்துப் படங்களிலும், சிவாஜியுடன் சுமார் பதினைந்து படங்களிலும் நடித்து இருக்கிறேன்.
பொதுமக்கள் மத்தியில் நடிகர், நடிகைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று எம்.ஜி.ஆர். சொல்லித்தருவார். யாரைப்பார்த்தாலும், இரண்டு கையெடுத்து கும்பிட வேண்டும் என்று சொல்வார்.
ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம், “நீ காலையில் எழுந்ததும் என்ன செய்வாய்?” என்று கேட்டார். “டீ குடிப்பேன்” என்றேன். “பல் துலக்குவதற்கு முன், கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டு பிறகு துப்பினால் அந்த அரிசியை சாப்பிடுகிற கோழி செத்துப்போயிடும். அந்த அளவுக்கு அதில் விஷம் இருக்கிறது. அதனால் பல் துலக்குவதற்கு முன் எதையும் சாப்பிடக்கூடாது” என்று சொன்னார்.

அன்று முதல் நான் பல் துலக்கிவிட்டுத்தான் டீ, காபி சாப்பிடுவேன்.
சிவாஜியிடம் இருந்து நிறைய ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். அவர் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.
என் மகள் திருமணத்தன்று “விஜயா பொண்ணுக்கு இன்று திருமணம்” என்று தன்னுடன் குடும்பத்தினரையும் அதிகாலையிலேயே எழ வைத்து முதல் ஆளாக திருமண மண்டபத்துக்கு வந்துவிட்டார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி வந்த பிறகுதான் நடிகர், நடிகைகளுக்கு சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் கிடைத்தது. வெறும் நடிகர்களாக மட்டுமல்லாமல், அரசியலிலும் நடிகர், நடிகைகள் பிரகாசிப்பதற்கு அவர்கள் இருவரும்தான் காரணம்.
என் கணவர் வேலாயுதம் அந்த காலத்தில், சொந்தமாக விமானமும், கப்பலும் வைத்திருந்தார். மொத்தம் 4 பேர் அமரக்கூடிய அந்த விமானத்தை என் கணவரே ஓட்டுவார். ஒருமுறை கோவையில் இருந்து சென்னை திரும்பும் போது அந்த விமானத்தின் ஒரு டயர் கீழே இறங்கவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த சம்பவத்துக்குப்பின் விமானத்தை விற்றுவிட்டோம். அதேபோல் கப்பலையும் ஒரு சூழ்நிலையில் கொடுத்து விட்டோம்.
எங்க குடும்பத்தில் நான் ஒருத்திதான் படிக்காதவள். படிக்காத காரணத்தால்தான் நான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். 16 வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அப்போது எனக்கு தமிழ் சரியாக பேச வராது. ‘டியூஷன்’ வைத்து தமிழ் கற்றுக்கொண்டேன்.
என் முதல் படமே (கற்பகம்) வெற்றி பெற்றதால் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. வருடத்துக்கு பத்து படங்கள் வரை நடித்தேன். பத்து வருடங்கள் ரொம்ப பிசியாக இருந்தேன். 1963 இல் திரையுலகுக்கு வந்த நான் 73 இல் நூறு படங்களில் நடித்து முடித்து விட்டேன்.
என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர், டைரக்டர் கே.எஸ். கோபால கிருஷ்ணன். ‘கற்பகம்’ படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒருநாள் மாலையில் “சார் நான் நாடக்தில் நடிக்க போகணும்” என்று டைரக்டரிடம் கேட்டேன்.
“உனக்கு சினிமா வேண்டுமா, நாடகம் வேண்டுமா? இரண்டில் ஒன்றை முடிவு செய்துகொள்” என்று டைரக்டர் கூறிவிட்டார். அன்று முதல், படப்பிடிப்பு நடக்கும் போது வேறு எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். நான் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பத்து நாட்கள் அல்லது பதிமூன்று நாட்களில் எல்லாம் ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள்.
‘பலே பாண்டியா’ 13 நாட்களில் எடுக்கப்பட்ட படம். 20 நாட்களுக்குள் பெரும்பாலும் படத்தை எடுத்து முடித்து விடுவார்கள். அதிகபட்சம், மூன்று மாதங்கள் படம் எடுத்தால், அது மிக பிரமாண்டமான படம் என்று அர்த்தம்.
450 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், இன்று வரை சில படங்கள் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அந்தப் படங்கள்: கற்பகம், செல்வம், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், இதயக்கமலம், நம்ம வீட்டு தெய்வம், தங்கப்பதக்கம், திரிசூலம், கல்தூண், மிருதங்க சக்ரவர்த்தி, வாயாடி, திருடி, ரோஷக்காரி.
இறைவன் என் படிப்புக்கும், தகுதிக்கும் மீறி எனக்கு செல்வமும், செல்வாக்கும் கொடுத்து இருக்கிறார். கணவர், மகள், மருமகன், 2 பேரன்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்”.


சிவாஜpயின் மாண்பு







நடிகர் திலகம் நடிக்கும் சாந்திப் படத்தில் அவர் பாடுவதாக உணர்வு பூர்வமான பாடல் ஒன்று. மெல்லிசை மன்னர் எம். எஸ். வி. மிகவும் வித்தியாசமாக அந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கினார். டி. எம். எஸ். பாட வேண்டிய பாடல் அது என்பதால் அவரிடம் அந்தப் பாடலைப் பாடிக்காட்டினார் மெல்லிசை மன்னர் மெட்டைக் கேட்டுப் பார்த்த போது டி. எம். எஸ். முகத்தில் திருப்தியின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
நான் வழக்கமாகப் பாடும் பாடல்களில் இருந்து இதற்ப் பாடலின் மெட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அது மட்டுமன்றி இந்த மெட்டு என் பாணிக்கு ஒத்துவரக் கூடிய விதத்திலும் இல்லை. எனவே மன்னிக்க வேண்டும். இந்தப் பாடலை என்னால் பாட முடியாது’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் டி. எம். எஸ். “நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது.
இது கொஞ்சம் வித்தியாசமான மெட்டுத்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உங்களுக்கு இருக்கும் அபாரமான இசைப்புலமைக்கும் குரல் வளத்துக்கும் இந்தப் பாடலை உங்களால் வெகு சிறப்பாகப் பாட முடியும். எனவே நீங்கள் மறுக்காமல் இந்தப் பாடலைப் பாடிக் கொடுக்க வேண்டும்” என்று டி. எம். எஸ். ஸிடம் வேண்டுகோள் விடுத்தார். எம். எஸ். வி.
‘அப்படியா? இந்தப் பாடலோடு என்னை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிaர்களோ?’ என்று மறுபடியும் கொஞ்சம் கோபமாகவே கேட்டார் டி. எம். எஸ். ஆனால் எம். எஸ். வி. தமது முடிவில் இருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை. ‘நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இந்தப் பாடலும் உங்கள் பாடல்களில் மற்றுமொரு தனித்துவம் பெற்ற பாடலாக மிளிரத்தான் போகிறது’ என்று சொல்லிய எம். எஸ். வி டி. எம். எஸ். ஸை சமாதானம் செய்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்.
பாடல் காட்சியில் நடிக்க வந்த நடிகர் திலகத்திடம் அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினார்கள். பாடலைக் கேட்ட நடிகர் திலகம் ‘உடனடியாக படப்பிடிப்பை ரத்துச் செய்யுங்கள். இன்னொரு தினம் இந்தப் பாடல் காட்சிக்கான படப் பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்றார்.
அவரிடம் காரணம் கேட்ட போது அவர் சொன்னார். ‘மிக மிக வித்தியாசமாக இந்தப் பாடலின் மெட்டை எம். எஸ். வி. உருவாக்கி இருக்கிறார். டி. எம். எஸ். மிகவும் அபாரமாக இந்தப் பாடலைப் பாடிக்கொடுத்து இருக்கிறார்.
இந்தப் பாடலை ஒரு சவாலான பாடலாக நான் கருதுகிறேன். டி. எம். எஸ். ஸ¤ம், எம். எஸ். வியும் உயிரைக் கொடுத்து உழைத்த இந்தப் பாடலில் எனது நடிப்பும் உயிரோட்டமாக அமையுமாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதற்கு எனக்கு அவகாசம் வேண்டும். அதனால்தான் படப்பிடிப்பை ரத்த செய்யச் சொன்னேன்” என்றாராம் சிவாஜி.
சொன்னது போலவே அந்தப் பாடலை பல முறை கேட்டுப் பார்த்து அந்த மெட்டையும் டி. எம். எஸ்.ஸின் குரலில் உள்ள பாவங்க¨யும் நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம் மிக வித்தியாசமாக அந்தப் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்தார்.
அந்தப் பாடல் எது என்று கேட்கிaர்களா, சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘யார் அந்த நிலவு’ ஏன் இந்தப் கனவு?’

No comments:

Post a Comment