Thursday, May 17, 2012

 


07 மொழிகளில் 1500 க்கு படங்களில் நடித்து சாதனை படைத்தவர்

‘தேன்மொழியாள்’ பண்டரிபாய் 14 வயதில் நடிக்கத் தொடங்கினார்.

சிவாஜிகணேசனின் முதல் படமான பராசக்தியில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் பண்டரிபாய். பிறகு அவருக்கு தங்கையாக, அக்காவாக, அண்ணியாக, அம்மாவாகவும் நடித்தார்.
7 மொழிகளில் 1500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார். பண்டரிபாயின் சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்கல் என்ற கிராமம். 1930ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தார். தந்தை ரங்காராவ். தாயார் காவேரிபாய். பண்டரிபாயுடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர்.
பண்டரிபாயின் தந்தை ஓவிய ஆசிரியர். என்றாலும் நாடகத்தன் மீது அபார மோகம். எனவே, வேலையை விட்டு விலகி, நாடகக் கம்பனி ஆரம்பித்தார். எனினும் தன் மகள்கள் யாரும் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்தார்.
நாடகம் பற்றிச் பேசக் கூடாது என்று தடை உத்தரவு போட்டிருந்தார். நாடகத்துக்கு பதிலாக, மகள்களுக்குக் கதாகாலட்சேபம் கற்றுக் கொடுத்தார். பண்டரிபாய் தன் 10 வயதிலேயே கன்னடத்திலும், மராத்தியிலும் கதாகாலட்சேபம் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றார். இவ்வளவு சிறப்பாக காலட்சேபம் செய்கிற பண்டரிபாய் சினிமாவில் நடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று அவரது அண்ணன் நினைத்தார்.
அவர் முயற்சியால் “வாணி” என்ற கன்னட படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு பண்டரிபாய்க்கு கிடைத்தது. ஹரிதாஸ் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் மெகாஹிட் படத்தில் பண்டரிபாய்க்கு ஒரு சிறு வேடம் கிடைத்தது.
தமிழில் அது தான் அவருக்கு முதல் படம். படத்தின் முதல் காட்சியில் “வாழ்விலோர் திருநாள்” என்று பாடிக் கொண்டே குதிரையில் வருவார் பாகவதர். பெண்களை துரத்துவார். ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் பண்டரிபாயை விரட்டிக் கொண்டு போவார். அவரை துயில் உரிய முயற்சிப்பார். பிறகு ஒரு மோதிரத்தை பரிசளிப்பார்.
இந்தக் காட்சியில் பண்டரிபாய் நடித்தார். அப்போது அவருக்கு வயது 14 தான். பிறகு ஏ. வி. எம். தயாரித்த “வேதாள உலகம்” என்ற படத்தில் காளியாகத் தோன்றினார் பிறகு, வைஜயந்தி மாலா கதாநாயகியாக அறிமுகமான “வாழ்க்கை” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக பண்டரிபாய் நடிப்பதாக இருந்தது.
ஆனால் தமிழில் சரிவர பேச வராததால் அந்த வேடத்தில் டி. கே. எஸ். நாடகக் குழுவைச் சேர்ந்த எம். எஸ். திரவுபதி நடித்தார். “வாழ்க்கை” படம் “ஜீவிதம்” என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட போது இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.
பண்டரிபாய்க்கு தமிழ் கற்றுக் கொடுக்க பி. டி. சம்பந்தம் என்ற நடிகரை ஏ. வி. எம். நிறுவனம் ஏற்பாடு செய்தது. விரைவிலேயே தமிழில் அழகாக வசனம் பேச பண்டரிபாய் கற்றுக் கொண்டார். ஏ வி. எம். கூட்டுறவுடன் நேஷனல் பிக்சர்ஸ் 1952 இல் தயாரித்த பராசக்தி படத்தில், சிவாஜியின் ஜோடியாக பண்டரிபாய் நடித்தார்.
சின்ன வேடங்களில் நடித்த படங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் பண்டரிபாய் முக்கிய வேடத்தில் நடித்த முதல் தமிழ்ப் படம் பராசக்தி தான். அதில் சிறப்பாக நடித்ததுடன் கலைஞரின் வசனங்களை தெளிவாகவும், இனிமையாகவும் பேசி தேன்மொழியாள் என்று போற்றப்பட்டார். தொடர்ந்து சிவாஜிகணேசனுடன் பல படங்களில் பண்டரிபாய் நடித்தார். “கண்கள்” படத்தில் தங்கை, “திரும்பிப்பார்” படத்தில் அக்காள், “அந்தநாள்” படத்தில் மனைவி..... இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார்.

 

எம்.ஜp.ஆர். ஜhனகியை மறுமணம் செய்தது ஏன்?


இது முதல் மனைவி சதானந்தவதிக்கு தெரியாதா? 1950ம் ஆண்டு வெளிவந்த ‘மருதநாட்டு இளவரசி’யைத் தொடர்ந்து வி. என். ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக எம். ஜி. ஆர். ஏற்றார். ‘ராஜகுமாரி’ க்குப் பிறகு அபிமன்யு, என்ற படத்தை ஜுபிடர் பிக்சர்சார் தயாரித்தனர். இந்தப் படத்தில் எஸ். எம். குமரேசனும் அவருடைய ஜோடியாக யு. ஆர். ஜீவரத்தினமும் நடித்தனர்.
அபிமன்வின் தந்தை அர்ஜுனனாக எம். ஜி. ஆர். நடித்தார். படத்தின் பிற் பகுதியில் தான் அவர் வருவார். எனினும், நடிப்பு சிறப்பாக இருந்தது. மற்றும் நரசிம்மபாரதி, எம்.ஜி. சக்ரபாணி, நம்பியார். கே. மாலதி எம். ஆர். சந்தானலட்சுமி ஆகியோரும் நடித்தனர்.
அபிமன்யுவின் வசனங்களை கருணாநிதி தான் எழுதினார் என்றாலும், படத்தில் அவர் பெயர் இடம்பெறவில்லை. திரைக்கதை வசனம் ஏ. எஸ். ஏ. சாமி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது. இந்தப் படத்தை எம். சோமசுந்தரமும், ஏ. காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர்.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்து, லண்டனில் உள்ள பிரிவுகவுன்சில் (வெள்ளையர் ஆட்சியின்போது உச்சநீதி மன்றம்) வரை சென்று விடுதலையான எம். கே. தியாகராஜ பாகவதர், ‘ராஜமுக்தி’ என்ற படத்தை தயாரித்தார். படப்பிடிப்பு புனா நகரில் நடந்தது.
இதில் பாகவதரும், வி. என். ஜானகியும் ஜோடியாக நடித்தனர். பாகவதருக்கு அடுத்த வேடத்தில், தளபதியாக எம். ஜி. ஆர். நடித்தார். வில்லி போன்ற வேடத்தில் பி. பானுமதி நடித்தார். அவர் நடித்த முதல் தமிழ்ப் படம் இதுதான். இந்தப் படத்தில் நடிக்கும்போது, எம். ஜி. ஆரும், வி. என். ஜானகியும் முதன் முதலாக நேரில் சந்தித்துக் கொண்டனர்.
ஜானகியை எம். ஜி. ஆர். ஏற்கனவே படத்தில் பார்த்திருக்கிறார். எம். ஜி. ஆரின் முதல் மனைவியான பார்கவி என்கிற தங்கமணியைப் போலவே ஜானகி இருந்தது அவருக்கு வியப்பளித்தது. நேரில் சந்தித்தபோது அசந்தே போனார். பார்கவியின் அசல் அச்சு போலவே ஜானகி காட்சி அளித்தார்.
இதன் காரணமாக, இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஒருவர் மனதில் ஒருவர் இடம்பெற்றனர். இதே சமயத்தில், ஜூபிடரின் ‘மோகினி’ படத்தில் எம். ஜி. ஆரும், ஜானகியும் ஜோடியாக நடித்தனர்.
1948 அக்டோபர் 9ம் திகதி ‘ராஜமுக்தி’யும் அதே மாதம் 31ம் திகதி மோகினியும் திரையிடப்பட்டன. இதில் ‘ராஜமுக்தி’ தோல்வி அடைந்தது. மோகினி வெற்றி பெற்றது.
பின்னர் கோவிந்தன் கம்பெனி தயாரித்த மருதநாட்டு இளவரசியில் எம். ஜி. ஆரும். வி. என். ஜானகியும் இணைந்து நடித்தனர். மற்றும் எம். ஜி. சக்ரபாணி, பி. எஸ். வீரப்பா, சி.கே. சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். கதை வசனத்தை மு. கருணாநிதி எழுதினார். ஏ. காசிலிங்கம் டைரக்ட் செய்தார். இந்தப் படத்தில் வி. என். ஜானகி மருதநாட்டின் இளவரசி. அவர் சாதாரண இளைஞனான எம்.ஜி. ஆரை காதலிப்பார். அவர் இளவரசி என்று எம். ஜி. ஆருக்குத் தெரியாது. அதனால் அவரும் காதலிப்பார். எம்.ஜி. ஆருக்கு கத்திச் சண்டை கற்றுத் தருவார் ஜானகி.
அரசருக்கு எதிராக, அரசனின் இளைய மனைவியின் சகோதரன் திட்டம் தீட்டுவான். அதை எம். ஜி. ஆரும் ஜானகியும் சேர்ந்து முறியடிப்பார்கள். இந்தப் படத்தில் எம். ஜி. ஆர். ஒரு வேட்டி மட்டும் அணிந்து சாதாரண குடிமகனாக நடிப்பார். படம் முழுவதும் இந்த ஒரே உடைதான்.
கருணாநிதியின் வசனம் அருமையாக அமைந்தது. எம். ஜி. ஆரும் ஜானகியும் சிறப்பாக நடித்திருந்தனர். எம். ஜி. ஆரின் கத்திச் சண்டைகள் ரசிகர்களைக் கவர்ந்தன. படம் வெற்றி பெற்றது.
மருதநாட்டு இளவரசி 1950ல் வெளி வந்தது. அதைத் தொடர்ந்து, ஜானகியை தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்க எம். ஜி. ஆர். தீர்மானித்தார். அதற்கு முன் மனைவியின் சம்மதத்தைப் பெற எண்ணினார். ஜானகியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, மனைவி சதானந்தவதியிடம் அறிமுகம் செய்து வைத்தார். சதானந்தவதியை, ‘அக்கா’ என்றே அழைத்தார் ஜானகி. இருவரும் சகோதரிபோலவே பழகினார்கள். நாளடைவில், எம். ஜி. ஆர். மனதில் ஜானகி இடம் பெற்றிருப்பதை சதானந்தவதி தெரிந்துகொண்டார்.
கணவரை ஒரு நாள் அழைத்து, ‘வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருந்து வருகிறேன். என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. என் தங்கையை (ஜானகி) நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். இதைக் கேட்டு எம். ஜி. ஆர். கண்கலங்கினார். ‘நீ மனப் பூர்வமாகத்தான் சொல்கிறாயா?’ என்று கேட்டார். மனப்பூர்வமாகத்தான் கூறுகிறேன். ஜானகியை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஆனால் நானும் ஜானகியும் ஒரே வீட்டில் இருக்கவேண்டாம்.
அவளுக்குத் தனி வீடு பார்த்து குடிவையுங்கள் என்றார் சதானந்தவதி. மனைவியின் பூரண சம்மதத்துடன், ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். எம். ஜி. ஆர். பாகவதர், சின்னப்பா காலத்தில் பெரிய பாடல் ஆசிரியராகத் திகழ்ந்த பாபநாசம் சிவனின் அண்ணன் பி. ஆர். ராஜகோபாலய்யரின் மகள் தான் வி. என். ஜானகி. (வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கமே வி. என். ஜானகி) எம். ஜி. ஆர். சாதாரண வேடங்களில் நடித்து வந்த காலகட்டத்திலேயே அவர் கதாநாயகியாக புகழ் பெற்று விளங்கினார். எம். ஜி. ஆரை விட அதிக சம்பளம் வாங்கி வந்தவர். எனினும் எம்.ஜி. ஆரை மணந்தபின் நடிப்பதை நிறுத்திவிட்டார். கணவரின் சாதனைகளுக்கு துணை நின்றார்.

 

நாடு கடத்தப்பட்ட பெற்றோருடன் இலங்கைக்கு வந்தவர் சந்திரபாபு


சந்திரபாபு தூத்துக்குடியில்கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில் சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக்கொண்டார்.
விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட அவர்களுடன் சென்ற சந்திரபாபு, கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16 ஆம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.
ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார். உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டது தான் தெரியும், என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்.
1937 ஆம் ஆண்டு அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950 களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம். ஜி. ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப்போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.
தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.
தமது நடிப்பிற்காகவும் பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார்.
நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் முதலிரவன்றே தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூற, மறு நாள் அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை ஒற்றியே தாம் அந்த 7 நாட்கள் படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிக இயக்குனர் பாக்கியராஜ் கூறினார்)
சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன.
கவலை இல்லாத மனிதன் மற்றும் குமாரராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைக்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும் அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், மீண்டும், பொலிஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடமேற்கத் துவங்கினார்.
அவர் தாமே கதாநாயகனாக நடித்து தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960 களில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் துவங்கியதும், சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும் அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும் அடிமைப்பெண் ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார்.
1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே. 1974 ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.
சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்.

 

 

 

மடிசார் மாமிக்கு அமெரிக்காவில்

தேனிலவு

புதுமணத் தம்பதிகளாய் மாறியிருக்கும் சினேகா - பிரசன்னா ஜோடி தங்களது ஹனிமூனை வெளிநாட்டில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். சினேகா - பிரசன்னா அச்சமுண்டு அச்சமுண்டு படம் அமெரிக்காவில் உருவான போதுதான் சினேகாவும், பிரசன்னாவும் காதலிக்க தொடங்கினர். அதன் காரணமாக தங்களது ஹனிமூனை அமெரிக்காவில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அமெரிக்காவில் சில குறிப்பிட்ட இடங்களை இருவரும் தேர்வு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் இருவரும் ஹனிமூனுக்காக அமெரிக்கா பறக்க இருக்கின்றனர்.

 

மனசு இலேசானால் என்றும் இளமைதான்

நதியா


1980 களில் ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்தவர் நடிகை நதியா. டைரக்டர் பாசிலின் பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நதியா தொடர்ந்து பூக்களை பறிக்காதீர்கள், உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்னதம்தம்பி பெரியதம்பி, அன்புள்ள அப்பா, பூமழை பொழியுது உள்ளிட்ட தொடர் ஹீட் படங்களை கொடுத்தார்.
4 வருடம் சினிமாவில் இருந்த நதியா பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். நடித்து கொண்டிருக்கும் போதே வங்கி அதிகாரியாக இருந்த தனது குடும்ப நண்பரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் போய் செட்டில் ஆனார். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவியின் அம்மாவாக ‘எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் பிரவேசித்தார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வரும் நதியா அளித்த பிரத்தியேக பேட்டி இதோ....
தமிழ் சினிமாவில் நான் நடித்த சில படங்கள் பக்கத்து வீட்டு பெண் போன்ற ரோலில் தான் அதிகம் நடித்தேன். நிறைய ரசிகர்கள் என்னை கொண்டாடினார்கள். பல பாடல்கள் சூப்பர் ஹிட். குறிப்பா என்னுடைய ஸ்டைல் ரொம்ப பேசப்பட்டது. ஆனா, நான் ரொம்ப சாதாரணமா ஒரு டிரஸ் போட்டு கொண்டாலும் அது எல்லோருக்கும் பிடிச்சது. ரோட்டில் விற்பனையான குறைந்த விலையில் உள்ள பிளாஸ்டிக் தோடுகளை தான் அதிகம் அணிந்தேன். ஆனால் அது கூட ஒரு ஸ்டைலாச்சு.
இப்போது எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த பெண் சனம் (15), 2வது பெண் ஜனா (11) இப்போ நாங்கள் மும்பையில் இருக்கோம். இரண்டு பேரும் என்னை அப்படி வேலை வாங்குவாங்க. விளையாட்டு, மியூசிக் என்று எல்லா கிளாஸ்க்கும் நான் தான் அழைத்து போகணும். என் குழந்தைகளுக்கு சுத்தமா சினிமா ஆர்வம் கிடையாது.
என் கணவருக்கு நான் பாதியில் நடிப்பை விட்டுவிட்டு கல்யாணம் பண்ணியது கொஞ்சம் வருத்தம். அதனால் தான் இப்பவும் என்னை நடிக்க சொல்லுவார். அதனால் தான் சில படங்களில் நடித்து வருகிறேன். எல்லோரும் நான் இன்னும் அப்படியே இளமையா இருக்கேன் என்று சொல்றாங்க.
நாம் எந்தளவு உணவு உட்கொள்கிறமோ, அந்தளவுக்கு உடற் பயிற்சியும் அவசியம். மனசு எப்பவும் ரிலாக்ஸா வச்சிக்கணும். அது போதும் எத்தனை வருஷம் ஆனாலும் எல்லோரும் இளமையாக இருக்கலாம் என்று சொல்லி முடித்த நதியா, அடுத்து தெலுங்கில் தன்னுடைய படம் ஒன்று ரிலீஸ் ஆக இருப்பதாக கூறினார்.

 

 

பிரான்ஸ் பட விழாவில் 5 மாத குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய்


கேன்ஸ் பட விழா பிரான்சில் இன்று 16 ஆம் திகதி தொடங்குகிறது. இந்தப் பட விழாவில் 4 இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அவற்றில் மூன்று படங்கள் அனுராக் காஷ்யாப் தயாரித்த படங்கள் ஆகும். கேன்ஸ் பட விழாவில் நடிகர் அர்ஜுன் ராம்பால், மனைவி மெஹர், ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய் தனது 5 மாத குழந்தையான ஆராத்யாவுடன் கலந்து கொள்கிறார். 38 வயதாகும் ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்வது இது 11 வது தடவையாகும்.
சில ஆண்டுகள் கேன்ஸ் பட விழா குழுவின் விளம்பர தூதராக ஐஸ்வர்யா ராய் பணியாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த கேன்விஸ் பட விழாவின்போது ‘ஹீரோயின்’ என்ற படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமானார்.
பின்னர் அந்த சினிமா படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஐஸ்வர்யா ராய் கர்ப்பிணியாக இருப்பதால் அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அந்த படத்தில் கரீனா கபூர் நடித்தார். கேன்ஸ் பட விழாவில் நடிகை சோனம் கபூரும் கலந்து கொள்ள உள்ளார்.

No comments:

Post a Comment