தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் சினிமா கனவுகளுடன் அத்துறைக்குள் பிரவேசித்திருக்கும் இளம் சினிமா கலைஞர்களுக்கு களமமைத்து கொடுக்கும் நோக்கில் இளைஞர்களின் சினிமா அறுவடையாக (Youth cinematic Harvest) சர்வதேச இளைஞர் திரைப்பட விழாவை நடாத்தி வருகின்றது. 10 வருடங்களுக்கு முன்னர் உள் நாட்டு திரைப்படக் கலைஞர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா தற்போது சர்வதேச நாடுகள் பலவற்றின் தயாரிப்புகளுடன் எம்மவர்களும் இணைந்து போட்டியிடும் வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. இம்முறை ரஷ்ய கலாசார மத்திய நிலையத்தில் 10வது சர்வதேச இளைஞர் திரைப்பட விழாவை நடாத்தியிருந்து. இப்போட்டிக்காக சுமார் 150 உள் நாட்டு தயாரிப்புக்களும் 50 சர்வதேச தயாரிப்புக்களும் விண்ணப்பித்து தகுதி பெற்றிருந்தன. இவற்றில் 20 குறுந்திரைப்படங்களும் 20ஆவணப்படங்களும் 21இலிருந்து 23ம் திகதிவரை மக்கள் பார்வைக்காக திரையிடப்பட்டதுடன் 24ஆம் திகதி விருது வழங்கும் விழாவை நடாத்தியிருந்தது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயம் சட்டத்தரணி சிந்தக ஹேவாபத்திரனவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே கலந்துக்கொண்டார். விருதுக்காக தெரிவு செய்யும் நடுவர்குழு சர்வதேச -திரைப்பட வல்லுனர்கள் பலரை கொண்டதாக காணப்பட்டதுடன் ஜுரியின் விசேட அதிதியாக சர்வதேச திரைப்பட இயக்குனர் இந்தியாவின் ஸ்ரீ சாஜி நாராயண் கருன் கலந்து கொண்டார் அத்துடன் இவ்விழாவின்போது அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு, சர்வதேச மட்டம் என இரு பிரிவுகளாக இத்திரைப்படங்கள் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன் சர்வதேச மட்டத்தில் சிறந்த குறுந்திரைப்படமாக எகிப்து நாட்டின் மொராடா மொஸ்தபாவின் I PROMISE YOU PARADISE திரைப்படம் விருதுக்கு தெரிவாகியது. சிறந்த இயக்குனருக்கான விருது இலங்கையின் Let me go திரைப்படத்தை இயக்கிய சலன் பெரேரா பெற்றுக்கொண்டார். சர்வதேச மட்டத்தில் சிறந்த ஆவணப்படமாக இந்தியாவின் கௌரவ் பூரியினால் தயாரிக்கப்பட்ட A Bridged படம் தெரிவு செய்யப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு A Remembering of disremembering ஆவணப்படத்தை இயக்கிய பிலிப்பைன்ஸ் நாட்டின் கிரிஸ் பிரிங்காஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
உள்நாட்டுப் போட்டிப்பிரிவில் சிறந்த குறுந்திரைப்படத்துக்கான விருதுகளில் முதலாம் இடத்தை சந்தீப் மிதுனின் 'அரகல' குறுந்திரைப்படம் பெற்றுக்கொண்டதுடன் 2ஆம் இடத்தை கௌதமனின் ‘The Portraits’ உம் 3ஆம் இடத்தை கெனிஸ்டன் ஜோனின் 'நடுநிசி மாயம்' ஆகிய குறுந்திரைப்படங்களும் பெற்றுக்கொண்டன.
உள்நாட்டுப் போட்டிப்பிரிவில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதுகளுக்கு முதலாம் இடத்தினை மஹெசுரு பெரேராவின் ‘Cinephile’, 2ம் இடத்தை தரிந்து லொக்கு ஆரச்சியின் ‘The Portraits’ 3ம் இடத்தை பெதும் சந்தீப்பவின் ‘Entry prohibited’ஆகிய ஆவணத் திரைப்படங்கள் தெரிவாகின. வருடத்தின் சிறந்த நடிகருக்கான விருதினை ‘The Portraits’ 'குறும் திரைப்படத்தின் அப்துல்லா ரியாஸ் பெற்றுக் கொண்டார்.
நாட்டின் ஏனைய துறைகளைப் போலவே கலைத்துறையிலும் மிளிர துடிக்கும் இளைஞர்களின் ஆரம்பத்திற்கு உறுதியான அடித்தாளமிட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் எப்பொழுதும் துணை நிற்பதற்கு இவையும் சான்று பகிர்கின்றன..
No comments:
Post a Comment