Wednesday, April 30, 2014

தெரிந்த பாடல் தெரியாத தகவல்கள்

,இந்தப் பதிவில் எம்.ஜி ஆரும் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம். கண்ணதாசனும் எம். ஜி. ஆரும் மிகச் சிறந்த நண்பர்கள்.
இருவரும் ஒரே கட்சியில் பணியாற்றியவர்கள். 1972ம் ஆண்டு பொது இடங்களில் குடிப்பதற்கான தடை நீக்கப்பட்டிருந்தது. அதனால் ஆண்கள் குடிபோதையில் அடிமையாகி குடும்பங்களை மறந்து திரிகிறார்கள் என்று நிறைய பெண்கள் எம். ஜி. ஆரிடம் முறையிட்டனர். எம். ஜி. ஆர். அந்த காலத்தில் தன் படங்களில் சமூக பிரச்சினையை தீர்ப்பது போன்ற காட்சியில் அதிகம் நடிப்பார்.
தன் அரசியல் பிரவேசத்திற்கு சினிமாவை ஒரு மிகச் சிறந்த கருவியாக எம். ஜி. ஆர் பயன்படுத்தினார். எம். ஜி. ஆர். குடிப்பழக்கத்திற்கு எதிரான தன் கருத்தை படத்தில் பாடலாக வைக்க வேண்டும் என நினைத்தார்.
இந்த பாடலை நம் கவிஞரை விட யாராலும் எழுத முடியாது என்று நினைத்து அவரிடம் இந்தப் பாடலை எழுதச் சொன்னார். நம் கவிஞரோ எப்போதும் போதையில் இருப்பவர். அதனால். தான் எப்படி இந்தப் பாடலை எழுத முடியும் என யோசித்தார். இருந்தாலும் எம். ஜி. ஆரின் அன்புக் கட்டளையும் தட்ட முடியவில்லை.
அந்த சூழ்நிலையில் அவர் எழுதிய பாடல் தான் ‘சிலர் குடிப்பவர் போலே நடிப்பார் சிலர் நடிப்பவர் போலே குடிப்பார்’ எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடலில் குடியால் ஏற்படுகின்ற தீமையும் சொல்லியிருப்பார், அதே சமயம் குடியால் ஏற்படுகின்ற அனுபவத்தையும் மறைமுகமாக சொல்லியிருப்பார்.
சிலர் குடிப்பதுபோலே நடிப்பார் சிலர் நடிப்பதுபோலே குடிப்பார்.
சிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டலில் மயங்குவார். மதுவுக்கு ஏது இரகசியம் அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம். மதுவில் விழுந்த வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம். நானமில்லை வெட்கமில்லை போதையேறும்போது நல்லவனும் தீயவனே கோப்பையேந்தும்போது புகழிலும் போதையில்லையே பிள்ளை மழலையில் போதையில்லையே
காதலில் போதையில்லையே நெஞ்சில் கருணையில் போதையில்லையே.
மன.ம் மதி, அறம், நெறி தரும் சுகம் மதுதருமோ நீ நினைக்கும் போதைவரும் நன்மை செய்துபாரு நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப்பாரு
கவிஞரை பொறுத்தவரை குடிப்பது என்பது தனி மனித ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை அது எந்த விதத்திலும் சமுதாயத்தை பாதிக்காது என்பது அவரது கருத்து. எல்லாவற்றிலும் ஒரு போதையுண்டு. பணம் பொருள். புகழ் போன்றவையும் ஒரு வகையான போதையே அதனால் குடிபோதை பெரிய தவறல்ல என்பது அவரது கருத்து.
எம். ஜி. ஆர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். 1963ல் அவர் தி.மு.க வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார். தி. மு.க என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது. அப்போது எம். ஜி.ஆரின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம்சாட்டி அவரை கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர்.
அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார். சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை. அப்படி அவர் எழுதிய பாடல்தான் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்று தொடங்கும் பாடல்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிப்படும் மயங்காதே
ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அரிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில்பாதி
கழகத்தில் பிறப்பது தான் மீதி
மனம் கலங்காதே மதியமயங்காதே
இந்தப் பாடலில் தனக்கு எதிராக என்னதான் நடந்தாலும் கடைசியில் நியாயம் தான் ஜெயிக்கும் என்பது போல் பாடல் எழுதியிருப்பார். ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்ற வரிகள் வரும் காட்சியில் பின்னாலே கோபுரங்களை பார்த்து எம். ஜி. ஆர் கை காட்டுவது போல் அமைந்திருக்கும் (அது கடவுளை மறைமுகமாக குறிப்பதாக காட்சியமைதிருப்பார்) பின்னாலே தெரிவது அரிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு’ போன்ற வரிகள் இரண்டு அர்த்தங்களுடன் எழுதப்பட்டவை.
இவ்வாறு எம். ஜி.ஆரின் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தவர் கண்ணதாசன் அதனால் தான் அவரை எம். ஜி. ஆர் தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக்கி அழகு பார்த்தார்.

No comments:

Post a Comment