ஊட்டியில் “சோலைக்குயில்” படப்பிடிப்பு நடந்த போது நடிகை ராகினியை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார், கார்த்திக். அவர்களை கேயார் தன் வீட்டுக்கு அழைத்து நிஜமாகவே திருமணம் செய்து வைத்தார்.
இதுபற்றி கேயார் கூறியதாவது:
“கார்த்திக் நல்ல நடிகர். அவரது இயல்பான நடிப்பு பற்றி யாருக்கும் மறு கருத்து இருக்காது. அவர் மட்டும் பிரச்சினைகளுக்கு இடம் தராமல் பார்த்துக் கொண்டிருந்தால், இன்றிருக்கும் சில நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்!

படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கும் போது கதாநாயகன் கார்த்திக்கும், கதாநாயகி ராகினியும் காதலித்தனர். ரகசியமாக திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அதை பகிரங்கமாக அறிவிக்காமல் இருந்தனர். படம் முடிந்ததும், இருவரும் கன்னிமரா ஹோட்டலில் தங்கியிருப்பதாக எனக்கு தெரிய வந்தது.
இருவரையும் என் வீட்டிற்கு அழைத்தேன். கார்த்திக் அப்போது சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். அதனால் என் பட்டு வேட்டியைக் கொடுத்து அவரை கட்டிக்கொள்ளச் சொன்னேன். சினிமா மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸரை அழைத்து இருவரையும் புதுப்பெண் மாப்பிள்ளையாக மாற்றியாகிவிட்டது. அப்போது நான் சொன்னேன்; “இது சினிமாவில் வரும் கல்யாணம் மாதிரி ஆகிவிடக்கூடாது.
ஒழுங்காக இந்தப் பெண்ணை வாழ வைக்க வேண்டும்” என்றேன். கார்த்திக் சத்தியமும் செய்தார். அதன் பிறகுதான் பத்திரிகைகளை அழைத்து இதுபற்றி சொன்னேன். தாமதமாக அறிவிக்கக் காரணம், படம் பாதிப்படையக் கூடாது என்பதுதான்” என்று விளக்கமும் கூறினேன்.
“சோலைக்குயில்” படத்துடன் கடைசியில் கார்த்திக் திருமணம் வரவேற்புக் காட்சிகள் இணைத்துக் காட்டப்பட்டன. ஒரு சமயம் அவர் என்னிடம் அவசரமாக ஓடிவந்தார். தலை போகிற அவசரம் என்று ஒரு தொகையை கேட்டார். உண்மையாகவே அவருக்கு ஒரு பிரச்சினை அவருக்கு உதவினேன்.
இவ்வளவு தூரம் என்னுடன் பழகியவர் கார்த்திக். மலையாளத்தில் வெளிவந்த “சல்லாபம்” படத்தை “தொட்டால் பூ மலரும்” என்ற பெயரில் படமாக்க முடிவு செய்தேன். படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெறுவதாக இருந்தது. கார்த்திக்குடன் முரளியும் இப்படத்தில் உண்டு.
நானும், படப்பிடிப்புக் குழுவினர் சுமார் 20 பேரும் பொள்ளாச்சி சென்றோம். 2001 ஆகஸ்ட் 6 ஆம் திகதி படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்து அன்று காலை 7.30 முதல் 9 மணி வரை ராகுகாலம் என்றார்கள். ஆனால் காலை 8.35 மணிக்கு ‘குரு ஓரை’ வருவதாகச் சொன்னார்கள்.
எனவே, ராகுகாலம் பற்றி கவலைப்படாமல், காலை 8.35 மணிக்கு ஒரு விநாயகர் கோவில் முன் படப்பிடிப்பு நடத்த ஆயத்தமாக இருந்தோம். ஆனால் கார்த்திக் வரவில்லை. மறுநாளும் வரவில்லை. மாலையில் வந்தார். எதுவும் எடுக்க முடியவில்லை.
மூன்றாவது நாளும் வரவில்லை. இப்படி நடிகர்கள் வராமல் போனால் வேறு நடிகரைப் போட்டு படத்தை எடுத்து முடிக்கும் சம்பவங்கள் ஏற்கனவே நிறைய நடந்திருக்கின்றன. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர். சுந்தரம் கண்டிப்புக்கு போனவர். அவர் “சதி சுலோசனா” என்ற படத்தை அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார் பி.யு. சின்னப்பாவை கதாநாயகனாகப் போட்டு எடுப்பதாக இருந்தார்.
குறிப்பிட்ட நேரத்தில் சின்னப்பா வரவில்லை. இவ்வளவுக்கும், நடிப்பதற்கான வாய்ப்பு வராததால் சாமியாராகப் போய்விட நினைத்த சின்னப்பாவை, சேலத்திற்கு அழைத்துப்போய், “உத்தமபுத்திரன்” படத்தில் இரட்டை வேடம் கொடுத்து அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர் டி.ஆர். சுந்தரம்தான். அவர் படத்துக்கே குறித்த நேரத்தில் சின்னப்பா வரவில்லை.
இதனால் கோபம் அடைந்த டி.ஆர். சுந்தரம் என்ன செய்தார் தெரியுமா? மேக்கப் அறைக்குச் சென்றார். அவரே கதாநாயகன் இந்திரஜித்தாக மாறினார்! அதாவது, இந்திரஜித்துக்கு உரிய ‘மேகஅப்’பை போட்டுக்கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார்.
அவரும், கதாநாயகி கே.எல்.வி. வசந்தாவும் அன்றைய காட்சியை நடித்து முடிந்தனர். படம் தடங்கல் இன்றி வளர்ந்து, குறிப்பிட்ட திகதியில் ரிலீஸ் ஆகியது. கார்த்திக் வராததால் நான் வேறு நடிகரை வைத்து படத்தை எடுத்திருக்கலாம். அதை நான் விரும்பவில்லை.
டி.ஆர். சுந்தரம்போல் நானே கதாநாயகனாக நடிக்கவும் நினைக்கவில்லை! படத்தையே கைவிட தீர்மானித்தேன். பொள்ளாச்சிக்கு வந்திருந்த கலைஞர்களையும், படப்பிடிப்பு குழுவினரையும் திருப்பி அனுப்பி விட்டேன். “ராகு காலத்தில் படத்தைத் தொடங்கினீர்கள். அதுதான் நின்றுவிட்டது” என்று சிலர் கூறினார்கள்.
“நடிகர் நடிக்க வராமல் இருந்ததற்கு, காலத்தின் மீது ஏன் பழி போடுகிaர்கள்?” என்றேன். இந்தப் படத்தை ஆரம்பித்து கைவிட்டதால் எனக்கு 70 இலட்சம் ரூபாய் நஷ்டம். இதுபற்றி நான் கவலைப்படவில்லை. காரணம், இந்தப் படத்தை முக்கால்வாசி எடுத்து அதன் பின் நின்று போயிருந்தால் கோடிக்கணக்கில் அல்லவா நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்! இந்த சமயத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும்.
இந்த “தொட்டால் பூ மலரும்” படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முதன் முதலாக பேசப்பட்டவர் சேரன். டைரக்டராக புகழ் பெற்ற அவரை, கதாநாயகனாக்கி ஒரு படம் எடுக்க விரும்பினேன். அதற்காக அவருக்கு மலையாளத்தில் வந்த “சல்லாபம்” படத்தைப் போட்டுக்காட்டினேன்.
பிலிம் சேம்பர் தியேட்டரில் படம் பார்த்தார். அவருக்கும் நாயகனாகும் ஆசை இருந்தது. ‘சல்லாபம்’ படம் நகைச்சுவையாகவும் இருக்கும். மனசைத் தொடும் படியாகவும் இருக்கும். ஒரு கிராமத்துக்கு ஒரு பாடகன் வருவான். நன்றாகப் பாடுவான்.
ஆனால் அவன் ஒரு தச்சுவேலை செய்யும் (கார்பெண்டர்) குடும்பத்தைச் சேர்ந்தவன். இது நாயகிக்குத் தெரிந்து விடும். அவனைக் கேலி செய்வாள் ஒரு கட்டத்தில் நிஜமாகவே அவனுக்குள் சங்கீத் ஞானம் இருப்பது தெரியும். அவனது -(:r திறமையை கண்டு அதிசயிப்பாள். அதுவே காதலாக மாறும். இப்படிப்போகும் கதை. இது சேரனுக்கும் பிடித்தது. ஆனால் யாரோ என்னிடம், “சேரனுக்குப் பதில் கார்த்திக்கைப் போடலாம்” என்று சொன்னதும் என் மனம் மாறிவிட்டது.
கார்த்திக்கைப் போடத் தீர்மானித்தேன். ஆரம்பத்தில் எண்ணியபடி சேரனை நடிக்க வைத்திருந்தால் “தொட்டால் பூ மலரும்” படமும் வந்திருக்கும், சேரனை நடிகராக அறிமுகப்படுத்திய பெருமையும் எனக்குக் கிடைத்திருக்கும்” இவ்வாறு கேயார் கூறினார்.
No comments:
Post a Comment