Tuesday, September 3, 2013

பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகளுடன் அமைந்த சொல்லாட்சி

ரசனையும், ரசிகனும், காலமும், காதலும், கருத்தும், கருவும் நேர வெள்ளத்தில் சில மாற்றங்கள் பெறுகின்றன. வெள்ளத்தில் நீர் பெருகி ஓடினாலும், அதில் நிற்கும் திட மரங்கள் பல உண்டு. அப்படி பட்ட தமிழ் இசை வெள்ளத்தில், அஸ்திவார தூண்களின் பாடல்களில் ஒன்று இன்றைக்கு.
இசை மும்மூர்த்திகள் என்றே இவர்களை சொல்லலாம்: வாலி + டீ. எம். எஸ். + விஸ்வநாதன் ராமமூர்த்தி. இவர்கள் காலத்தில் காலன் வசம் சென்றனர். என்று சொல்வதை விட கற்பக காலத்துள் கலந்தனர் என்றே கூறலாம்.
என்ன தான் மூன்று தெய்வங்கள் இருந்தாலும், தமிழின் தனிக்கடவுள் முருகன். தமிழகத்தின் தனிப் பெரும் அபிமான தலைவர் எம். ஜி. ஆர். இந்த நால்வர் கூட்டணி, நாலா திசையும் பரவி (தமிழ்) நாட்டில் வெற்றி வாகை சூடியது. ஒவ்வொருவராலும் மற்றவர் அடைந்த பயன், நாம் அடையும் மகிழ்ச்சியைப் போன்றது.
படகோட்டி (1964) திரைப்படம். மாணிக்கம் (எம். ஜி. ஆர்.) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள் படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.
இசை நால்வர்
எட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் ‘தொட்டால் பூ மலரும்’, ஏதோ ஒரு சந்த கவி வடிவத்தின் சாயலில் உள்ளது என்பது என் சந்தேகம். பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன. அதுவும் நான்கு நான்கு வரிகளில் வாலியின் ‘சொல் விளையாடல்கள்’ மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.
இசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ: மெல்லிசை மன்னர்கள் இந்த படத்தில் வாலி போல, எம். ஜி. ஆர். போல, டி. எம். எஸ்.- சும் ஒரு கதாநாயகன் தான்.
படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம் புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல் இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி. சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம் அத்தனையும் முத்துக்கள் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்.
பாடலின் சிறப் இன்னும் உண்டு. காட்சியமைப்பு நீண்ட நெடும் கடற்கரை தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல் முக உணர்ச்சிகள் காட்டுவதில் கண் அசைவுகளில் சரோஜா தேவி ஆஹா தான்! கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என் கண் கவரும் வகையிலான பாடல் இந்தியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் சபாஷ்.

No comments:

Post a Comment