காதலிக்க நேரமில்லை' யில் வாய்ப்பு
கிடைத்தது சுவாரஸ்யமான கதை
துள்ளுவதோ இளமை ராஜஸ்ரீ
துள்ளுவதோ இளமை... ராஜஸ்ரீ இப்போது...! நேத்துதான் என் முதல் பட ஹீரோ ரவி (ரவிச்சந்திரன்)யை ஹாஸ்பிடல்ல பார்த்தேன். கோமாவில் இருக்காரு... மனசுக்கு ரெம்ப கஷ்டமா இருந்தது.
‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் எல்லாரும் இளமையான யூனிட்டா ஜாலியா வோர்க் பண்ணினது பசுமையா நினைவிருக்கு.... ஸ்ரீதர் சார், முத்துராமன், நாகேஷ்னு ஒவ்வொருத்தரா போய்க்கிட்டே இருக்காங்க...’ கண்கள் கலங்குவதற்கு முன்சுதாகரித்துக் கொண்டு “அதுக்கு என்ன பண்ண முடியும்?.....” என்கிறார் ராஜஸ்ரீ. ரவிச்சந்திரன் மரணத்திற்கு ஒரு நாள் முன்பு எடுத்த பேட்டி இது.

“குயிடிருந்த கோயில்” படத்தில் “துள்ளுவதோ இளமை.....” என்று எம்.ஜி.ஆருடன் இணைந்து வித்தியாசமான உடையில் உற்சாகமான ஆட்டம் போட்டு நம்மை ரசிக்க வைத்தவர் ராஜ ஸ்ரீ. அவரை தி. நகர் இல்லத்தில் சந்தித்தோம். கலை உலக அனுபவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
“நான் பிறந்தது ஆந்திராவில் உள்ள ஏலூர் என்கிற கிராமத்தில். அங்கு என்னுடைய அப்பா ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். என் கூட பிறந்தது ஒரே ஒரு அக்கா மட்டும் தான். அப்பவே அவங்களுக்கு திருமணமாகி பிள்ளைகள் இருந்தாங்க. எனக்கு பத்து வயதிருக்கும் பொழுது சென்னைக்கு வந்தோம். அப்போ தி. நகர்ல நாங்க இருந்த தெருவுல தான் நடிகை ஜமுனா, கிருஷ்ணகுமாரி, ஹீரோ செல்லம் என தெலுங்கு ஆர்ட்டிஸ்ட்கள் வீடும் இருந்தது. அவங்க வீட்டுக்கு நாங்க விளையாடப் போவோம்.
ஜமுனா வீட்டுக்கு ஏவி.எம். ஸ்டுடியோவில் டான்ஸ் மாஸ்டரா இருந்த தண்டாயுதபாணி பிள்ளை டான்ஸ் சொல்லிக் கொடுக்க வருவாரு. டான்ஸ் மாஸ்டரும் எங்ககிட்ட நல்ல பிரண்ட் ஆகிட்டாரு. அந்த நேரத்துல ஆந்திராவில் இருந்து எங்க வீட்டுக்கு நிறைய விருந்தாளிகள் வந்திருந்தாங்க. அவங்க ஷ¥ட்டிங் பார்க்கணும்ன்னு ஆசையா கேட்டாங்க. அதுவரை ஷ¥ட்டிங்கன்னா என்ன, சினிமான்னா என்னன்னு எதுவும் எங்களுக்குத் தெரியாது.
டான்ஸ் மாஸ்டர்கிட்ட போய் ஷ¥ட்டிங் பார்க்கணும்ன்னு கேட்டேன். மாஸ்டர் ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்து, “இதை எடுத்துகிட்டு நாளைக்கு ஏவி.எம்க்கு ஸ்டுடியோவுக்கு வாங்க. உள்ளே விடுவாங்க....”ன்னு சொன்னார்.

அவர் சொன்ன மாதிரியே நாங்களும் போய் ஒவ்வொரு ப்ளோரா பார்த்துகிட்டு இருந்தோம். அப்போ ஏவி.எம். ஸ்டூடியோ பரபர்ப்பா இருக்கும். தமிழ் ஷ¥ட்டிங் மட்டுமில்லாம ஹிந்தி, கன்னடம், சிங்களப் படங்கள் கூட எடுப்பாங்க. அப்படியே ஷ¥ட்டிங்கை வேடிக்கை பார்த்துகிட்டே வரும் பொழுது அங்க ரிகர்சல் ஹோல் இருந்தது.
அதில பெரிய நடராஜர் சிலைக்குப் பக்கத்துல தண்டாயுதபாணி மாஸ்டர் ஜமுனாவுக்கு டான்ஸ் ரிகர்சல் பண்ணிக்கிட்டு இருந்தாரு. அந்த இடத்தில் என் வயசு உள்ள பிள்ளைங்க நிறைய பேர் டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தாங்க. அங்க ஏவி.எம். செட்டியாரும் இருந்தாரு.
அவர் என்னைப் பார்த்ததும் இந்தப் பொண்ணு ரொம்ப நல்லா இருக்கு. ஜமுனாவோட சின்ன வயசு கேரக்டருக்கு இந்தப் பொண்ணு பொருத்தமா இருக்கும்ன்னு சொன்னார். மாஸ்ட்ர் “அவங்க வீட்டில் நடிக்க எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க...”ன்னு சொன்னார். செட்டியார் “பேசிட்டுச் சொல்லுங்க....”ன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.
அம்மாகிட்ட வந்து பேசினாங்க. “சினிமாவில எல்லாம் நடிச்சா எங்க கேஸ்ட்ல கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்கா. அதனால வேண்டாம்....”ன்னு சொன்னாங்க. ஆனா செட்டியாரும், மாஸ்டரும் விடல.
“சின்ன பொண்ணு தானே இதுல என்ன இருக்கு”ன்னு அம்மாகிட்ட பேசிப் பேசி சம்மதம் வாங்கிட்டார். அதன் பிறகு அந்தப் படத்தில் ஜமுனாவின் சின்ன வயசு கேரக்டரில் நடித்தேன். ஒரே பாட்டுல சின்ன வயசுல இருந்து பெரிய வயசுக்கு மாறுவது மாத்திரி சீன். அந்தப் படம் பேரு ‘நாக தேவதை’ அது தான் நான் நடிச்ச முதல் படம்.
அதன் பிறகு ஏவி.எம்ல என்னை நிரந்தர நடிகையாக ஒப்பந்தம் பண்ணிட்டாங்க. மாதம் இவ்வளவுன்னு சம்பளம் கொடுத்தாங்க. பள்ளிக்கூடம் இல்லாத நேர்த்தில் கார் அனுப்புவாங்க. டான்ஸ், பாட்டு, தமிழ், இந்தி என்று மற்ற மொழிகளையும் கற்றுக் கொடுத்தாங்க. அப்போ சச்சுவும் அங்க நிரந்தர நடிகையாக இருந்தாங்க. சச்சுவோட அவங்க பாட்டி வருவாங்க. என்னோட எங்க அக்கா வருவாங்க. அக்காவுக்கும் எனக்கும் ரொம்ப வயசு வித்தியாசம். அதனால எல்லாரும் அவரை என் அம்மான்னுதான் நினைப்பாங்க.
இந்த நேரத்தில சித்தூர் நாகய்யா “பக்த ராமதாஸ்”ன்னு தெலுங்குல ஒரு படம் எடுத்தாரு. அந்தப் படத்துல கண்ணாம்மா அவங்களுக்கு ஜூனியரா நடிக்கணும்ன்னு கேட்டாரு. அந்த நேரத்துல நான் ஏவி.எம். மோட நிரந்தர நடிகையாக மூன்று வருடம் ஒப்பந்தம் போட்டிருந்தோம். வேறு படங்களில் நடிக்க போகக் கூடாதுங்கிறது விதி.
நல்ல சான்ஸ் மிஸ்பண்ண வேணாம்னு வீட்டில முடிவு பண்ணினாங்க. எனக்குக் கல்யாணம் செய்யப்போறதா சொல்லி, ஏவி.எம்.ல. இருந்து வெளியே வந்து, அந்தப் படத்துல நடிச்சேன்.
அந்தக் காலத்துல ஒரு படம் எடுக்குறதுக்குக் குறைஞ்சது நாலு, அஞ்சு வருஷமாவது ஆகிவிடும். அந்த இடைவெளியில் நாங்க ஓரளவு வளர்ந்திடுவோம். அதனால் ஒரு சீன்ல பார்த்தா சின்னதா இருப்போம். ஒரு சீன்ல பார்த்தா பெரிய பொண்ணா இருப்போம். இப்படியே இரண்டு மூன்று படங்களில் நடிப்பதற்குள்ள நானும் ஓரளவு வளர்ந்துட்டேன்.
இது சோத¨யான கட்டம். அந்த வயசுல சைல்டு ஆர்ட்டிஸ்ட்டாகவும் நடிக்க முடியாது. ஹீரோயினாவும் நடிக்க முடியாது. ஏன்னா அப்போ எல்லாம் 20 - 21 வயதுக்கு மேல இருந்தாதான் ஹீரோயின் சான்ஸ் கொடுப்பாங்க. சாவித்திரி, தேவிகா, கிருஷ்ணகுமாரி எல்லாருமே அப்படித்தான் இருப்பாங்க. அதற்கு கம்மியான டீன் ஏஜ் வயசுல இருந்தா பேபி ஃபேஸ் இருக்குன்னு சொல்லி செகண்ட் ஹீரோயின், ஹீரோவோட தங்கை இந்த மாதிரியான சான்ஸ் கொடுப்பாங்க.
தெலுங்குல அந்த மாதிரி கேரக்கடரில் நடிக்கறதுக்கு நிறைய வாய்ப்பு வந்து அங்கு பிஸியாகிட்டேன். அதனால தமிழில் வந்த சில நல்ல பட வாய்ப்புகளையும் இழந்துவிட்டேன். உதாரணத்துக்குச் சொல்லணும்ன்னா பத்மினி, எம்.ஆர். ராதா நடிச்ச ‘சித்தி’ படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடிச்ச விஜய நிர்மலா பாத்திரத்தில் நான்தான் நடிச்சிருக்கணும்.
அதன் பிறகு தமிழில் ஹீரோயினா அறிமுகமானது “காதலிக்க நேரமில்லை” படத்தில்தான். அந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைச்சது சுவாரஸ்யமான கதை.
ஒரு நாள் வீட்டுக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசியவர் “நான் டைரக்டர் ஸ்ரீதர் பேசுறேன். நாளைக்கு ஷ¥ட்டிங் இருக்கு. கார் அனுப்புறேன் கிளம்பி வந்துடுங்க”ன்னு சொல்லிட்டு போன் வெச்சிட்டார்.
எங்களுக்கு டவுட்.... நாளைக்கு ஷ¥ட்டிங் வெச்சுட்டு இன்னைக்கா சொல்வாங்க. யாரோ சும்மா கிண்டல் செய்றாங்கன்னு நினைச்சோம். எங்க வீட்ல இருந்து சித்ராலாயாவுக்கு போன் பண்ணி கேட்டாங்க. அவங்களும் நாங்கதான் போன் பண்ணினோம். நாளைக்கு ஷ¥ட்டிங் இருக்கு வந்துடுங்கன்னு மறுபடியும் சொன்னாங்க. அப்பவும் எங்களுக்குக் குழப்பமாவே இருந்தது. ஏன்னா டிரஸ்க்கு அளவும் எடுக்கல, ஒண்ணுமில்லன்னு. சரி பெரிய டைரக்டர் சொல்றாரு, போய் பார்ப்போமேன்னு மறுநாள் போனேன்.
ஷ¥ட்டிங் சென்னையிலதான் நடந்தது. செட் போட்டிருந்தாங்க. சோங் ஷ¥ட் பண்றதா சொல்லி ஒரு நைட்டி கொண்டு வந்து கொடுத்து இதுதான் கொஸ்ட்யூம்னு சொன்னாங்க. ஹேர் ஸ்டைல் இல்ல, டான்ஸ் மூவ்மண்ட்ஸ் இல்ல. வெறும் எக்ஸ்பிரஷ்ன்தான். அதையும் டைரக்டரே இப்படி செய்மா, அப்படி செய்மான்னு சொல்லி கொடுத்துட்டாரு. அப்பத்தான் எங்களுக்குப் புரிஞ்சது நைட்டிங்கிறதுனால தான் டிரஸ் எல்லாம் அளவு எடுக்கலன்னு.
முதல் நாள், முதல் காட்சி “அனுபவம் புதுமை....” பாடல். அப்போ அந்தப் பாட்டுல ஆண் குரல் வரும் பொழுது யார் ஹீரோவா நடிக்கறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருந்தது. ஹீரோ யாருன்னு சொல்லல. இருந்தாலும் என்னோட போர்ஷன்ஸ் எல்லாம் நல்லபடியா முடிச்சு கொடுத்திட்டேன். அப்புறம்தான் ஹீரோவா ஒரு புதுப் பையன் நடிக்கிறாருன்னு சொன்னாங்க.
ஆனா ரவிசந்திரனுக்கு என்னன்னா நான்தான் அவருடைய முதல் ஹீரோயின். மலேசியாவில் இருந்து அப்பத்தான் நடிக்க வர்றாரு. அதன் பிறகுதான் காஞ்சனா, முத்தராமன், நாகேஷ், சச்சு எல்லாரும் வந்தாங்க. ரொம்ப எனர்ஜியான யங் டீம்மோடு வோர்க் பண்ணினோம். சென்னையில ஊட்டியில, பொள்ளாச்சி ஆழியார் டேம்ல எல்லாம் எடுத்தாங்க. படம் நல்லபடியா முடிஞ்சது. படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்று எனக்குப் புகழைத் தேடித்தந்தது.
படம் சூப்பர் ஹிட்டா போனதால அதை அப்படியே தெலுங்குல எடுத்தாங்க. அதில் நானும், காஞ்சனாவும் தமிழ்ல நாங்க நடிச்ச கேரக்டர்ல நடிச்சோம். அதே படம் இந்தியில் “பியார் கியே ஜான்”னு எடுத்தாங்க. அப்ப என் கேரக்டரை நானே இந்தியில நடிச்சேன். மூணு லாங்வேஜ்லையுமே படம் நல்ல ஹிட். ஆனா தெலுங்குல மட்டும் பிளாக் அண்ட் வொயிட்ல எடுத்தாங்க.
“பாமா விஜயம்”, “பூவா தலையா”, “அனுபவி ராஜா அனுபவி”, சிவாஜியோட “நீலவானம்” எஸ்.எஸ். ஆருடன் “பூம்புகார்”, ஜெயசங்கருடன் “செல்வமகள்”னு நிறைய தமிழ்ப் படத்தில நடிச்சேன்.
No comments:
Post a Comment