வாணிஸ்ரீ, எஸ்.எஸ். சந்திரன், சுருளிராஜன் அறிமுகமான படம்
ஜீலைஞானத்தை சிட்டாடல் அதிபர் ஜோசப் தளியத் வரவேற்று உபசரித்தார். ‘நீங்கள் நன்றாக கதை சொல்வீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் எனக்கு சொல்ல முடியுமா?’ என்று கேட்டார். கலைஞானம், தன் இதயச் சுரங்கத்தில் வைத்திருந்த கதைகளில் இரண்டு கதைகளை காட்சி வாரியாக விரிவாகச் சொன்னார். கதை சொல்லி முடிக்க இரண்டு மணி நேரம் ஆயிற்று.

அதுவரை ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கூட கையில் வாங்கியிராத கலைஞானம், ஐந்து நூறு ரூபாய்களைப் பெற்றதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.
கலைஞானத்தின் இரண்டு கதைகளில் ஒன்றான ‘காதல் படுத்தும்பாடு’ கதையை முதலில் படம் எடுக்க ஜோசப் தளியத் முடிவு செய்தார். அடுத்த மாதமே படப்பிடிப்பு தொடங்கியது. இது இரு மொழிப் படம். ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் படமாகியது. தமிழில் கதாநாயகியாக வாணிஸ்ரீ அறிமுகமானார். சுருளிராஜன், எஸ். எஸ். சந்திரன், எடிட்டர் வெள்ளைச்சாமி ஆகியோருக்கும் இதுதான் முதல் படம்.
படத்தின் ஹீரோ ஜெய்சங்கர்.
இந்தப்படத்தில் வாணிஸ்ரீ கதாநாயகியாக நடித்ததே எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சியாகும்.

அதுவரை படமாக்கப்பட்டிருந்த காட்சிகளை நீக்கிவிட்டு புதிய கதாநாயகியைப் போட்டு படத்தை எடுக்க ஜோசப் தளியத் தீர்மானித்தார். இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் கதாநாயகியாக கிருஷ்ணகுமாரி நடித்து வந்தார்.
அவருக்குத் தோழியாக வாணிஸ்ரீ நடித்தார். அவர் தோற்றத்தையும், நடிப்பையும் பார்த்த கலைஞானம், ‘எதிர்காலத்தில் இந்தப் பெண் பெரிய நடிகையாக வருவார்’ என்று கணித்தார். எனவே, ‘ராஜஸ்ரீக்கு பதிலாக வாணிஸ்ரீயை கதாநாயகியாக போடலாமே’ என்று ஜோசப் தளியத்திடம் யோசனை தெரிவித்தார்.
அதை தளியத் ஏற்றுக்கொண்டார். வாணிஸ்ரீ கதாநாயகியாக நடித்தார்.
‘காதல் படுத்தும் பாடு’ 1966 அக்டோபர் 7ல் வெளிவந்து வெற்றிபெற்றது. அதில் பங்கு கொண்டிருந்த அனைவருக்கும் பெயரும், புகழும் கிடைத்தன. குறிப்பாக கலைஞானம் சிறந்த கதாசிரியராகப் போற்றப் பாட்டார். பல பட அதிபர்கள் அவரை அணுகி கதை கேட்டார்கள்.
இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம்
கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மகன் பாடல் ஆசிரியர், கதை - வசனகர்த்தா, டைரக்டர், தயாரிப்பாளர் என்ற பல முகம் கொண்ட பஞ்சு அருணாசலம், ‘அன்னக்கிளி’ மூலம் இளையராஜாவை பட உலகுக்கு அறிமுகம் செய்தார். காரைக்குடியை அடுத்தசிறுகூடல்பட்டி கிராமம்தான் இவரது சொந்த ஊர்.

அதோடு சென்னையில் பிரபலமான பரணி ஸ்டூடியோவை (நடிகை பானுமதியின் சொந்த ஸ்டூடியோ) குத்தகைக்கு எடுத்து நிர்வாகம் செய்து வந்தார். ஏ. எல். சீனிவாசன் அளவுக்கு கண்ணதாசன் பிரபலமாகாத நேரம் அது.
பள்ளிக்கூடத்தில் தனிமை விரும்பியாக இருந்த பஞ்சு அருணாசலத்துக்கு சினிமாவில் முதலில் பிடித்தது பாடல்கள்தான். அத்துடன் கதைகள் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளி முடிந்ததும் நேராக இவர் செல்வது நூல் நிலையத்துக்கு. அங்கே சரத் சந்திரர். காண்டேகர், புதுமைப்பித்தன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை விரும்பிப் படிப்பார்.
‘பியூசி வரை படித்து முடித்து, மேற்கொண்டு படிக்க வசதியில்லாமல், நின்று போன படிப்போடும் மனசு நிறைய கதை எழுதும் ஆசையோடும், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு பயணப்பட்டார் பஞ்சு அருணாசலம். சென்னையில் நேராக சித்தப்பா ஏ. எல். சீனிவாசன் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தார்.
இவரை மேற்கொண்டு படிக்கும்படிசொன்னார் ஏ. எல். எஸ். இவரோ ஏதாவது பத்திரிகை ஆபிசில் சேர்ந்து கதை எழுத விரும்பினார். ‘நீயெல்லாம் என்னடா கதை எழுதப் போகிறாய்!’ என்று சிரித்தார் ஏ. எல். எஸ். ‘நான் நன்றாகக் கதை எழுதுவேன் சித்தப்பா’ என்று கூறினார் பஞ்சு அருணாசலம்.
‘சரி சரி, நூறு பேர் வேலை செய்கிற நம் ஸ்டூடியோவில் நீயும் வேலை பார்’ என்றார். ஏ. எல். எஸ். மறுநாளே, ஏ. எல். எஸ். குத்தகைக்கு எடுத்திருந்த பரணி ஸ்டூடியோவில் வேலையில் சேர்ந்தார். பஞ்சு அருணாசலம், அவரது, திரை உலக வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடப்பட்டது. அங்கேதான். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த வருகிறவர்களிடம், வாடகை பற்றி பேசி முடிவு எடுக்கும் வேலை, அவருடையது. வேலை முடிந்ததும், வீட்டுக்குப் போவதில்லை. ஸ்டூடியோவில் நடக்கும் படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பார்.
‘பாடல் எப்படி பதிவாகிறது’ என்பதை கூர்ந்து கவனிப்பார். சினிமா என்ற கனவுத் தொழிற்சாலை, அவருக்குப் பிடிபட ஆரம்பித்தது. 2 மணி நேரம் திரையில் ஓடும் ஒரு படத்தைத் தயாரிக்க ஒரு வருடம் கூட ஆகும் என்கிற உண்மை அவரை பிரமிப்பில் ஆழ்த்தியது. டைரக்டர் ஏ. பீம்சிங் புகழ் ஏணியில் ஏறத் தொடங்கியிருந்த காலக் கட்டம் அது.
ஏ. எல். எஸ். தயாரித்த ‘செந்தாமரை’ என்ற படத்தை அவர் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். சிவாஜியுடன் லலிதா - பத்மினி நடித்த படம். பீம்சிங்கிடம் உதவி டைரக்டராக சேர விரும்பிய பஞ்சு அருணாசலம், தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார். ‘செந்தாமரை படம் முடியட்டும், அதன் பிறகு கட்டாயம் சேர்த்துக்கொள்கிறேன்’ என்றார் பீம்சிங்.
12 வயதில் நாயகியாக நடித்தவர் சந்திரகலா
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம். ஜி. ஆருடன் இணைந்து நடித்த சந்திரகலா, பல்வேறு மொழிகளிலும் 125 படங்களில் நடித்தவர். சந்திரகலாவின் சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம். தந்தை இயக்குனர் எம். எஸ். நாயக். சந்திரகலா பிறந்த இரண்டு ஆண்டுகளில் அவரது குடும்பம் சென்னைக்கு வந்தது. சென்னை மாம்பலம் வித்யோதயா பள்ளியில் பள்ளிப் படிப்பை சந்திரகலா தொடங்கினார்.

அதே படம் இந்தியில் ‘ஷோலே அவுர் ஷப்னம்’ என்ற பெயரில் வெளிவந்தது. அந்தப் படத்தில் தர்மேந்திராவுடன் சந்திரகலா நடித்தார். இந்தப் படத்தை தயாரித்தவர் சந்திரகலாவின் தந்தை எம். எஸ். நாயக்தான்.
தமிழில் வெற்றிபெற்ற ஏ. வி. எம். மின் ‘குலதெய்வம்’ படம், கன்னடத்தில் ‘ஜேனுகூடு’ என்ற பெயரில் ஓய். ஆர். சாமி இயக்கத்தில் வெளிவந்தது. அதில் சந்திரகலா நடித்தார். இந்தியில் வெளியான ‘பாபி’ படத்தை கன்னடத்தில் தயாரித்தனர். அந்தப் படத்தில் துணை நடிகையாக சந்திரகலா நடித்தார். அப்பொழுது அவர் எஸ். எஸ். எல். சி. படித்து வந்தார்.
தமிழில் எம். ஜி. ஆர். - ஈ. வி. சரோஜா நடித்த ‘என் தங்கை’ படத்தை சந்திரகலாவின் தந்தை கன்னடத்தில் தயாரித்தார். தமிழில் ஈ. வி. சரோஜா நடித்த வேடத்தில் சந்திரகலா நடித்தார். கன்னடத்தில் என்தங்கை வெற்றிவாகை சூடியது. அதனால் தெலுங்கில் அந்தப் படத்தை எடுத்தனர். அதிலும், அதே வேடத்தில் சந்திரகலா நடித்தார். இதன் மூலம் கன்னடம், தெலுங்கு படங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது
இந்தியில் வெற்றிபெற்ற ‘ஆஞ்சல்’ என்ற படத்தை தெலுங்கில் தயாரித்தனர். அதில் சந்திரகலா நடித்தார். படத்தை நடிகை சாவித்திரி டைரக்ட் செய்தார். சந்திரகலாவின் நடிப்பால் கவரப்பட்ட சாவித்திரி, தனது சொந்த தயாரிப்பான ‘பிராப்தம்’ படத்தில் அவரை நடிக்க வைத்தார்.
‘பிராப்தம்’ படத்தைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க சந்திரகலாவுக்கு வாய்ப்புகள் வந்தன. எம். ஜி. ஆரின் சொந்த தயாரிப்பான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.
பாடல் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் எம். ஜி. ஆருடன் நடித்து பாராட்டுப் பெற்றார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சந்திரகலா.
நியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர்
மயிலாடுதுறை தில்லையடி வள்ளியம்மையை காண வந்த காந்தியடிகள் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். எங்கும் மக்கள் வெள்ளம். அந்நிய துணிகளை விலக்க வேண்டும் என்று தனது பேச்சில் வலியுறுத்துகிறார் காந்தி. கேட்டுக்கொண்டிருக்கும் ஜனம் உணர்ச்சிவசப்படுகிறது.

நியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர் நடிகவேள் எம். ஆர். ராதா. மேலே உள்ளது சின்ன உதாரணம். ராதாவை எப்படி வகைப்படுத்தலாம்? நாடக நடிகர்... சினிமா நடிகர்.... மெக்கானிக்... எலெக்ட்ரீஷியன்... கலகக்காரர்.....
நாடக நடிகர் என்றால் ராதா மகிழ்ச்சியடைவார். நடிப்புன்னா ரீ-டேக் இல்லாமல் மூணு மணி நேரம் நாடகத்தில் நடிக்கிறதுதான் என்பது ராதாவின் வாதம். சினிமா? அது ரிட்டையர்ட்மெண்ட். மெக்கானிக்கும், எலெக்ட்ரீஷியனும் வாழ்க்கை ப்ளோவில் அவர் கற்றுக்கொண்டவை. கல்யாணத்திற்கும் இது உதவியது.
அந்தக் காலத்தில் நாடக நடிகர்களுக்கு யார் பெண் தருவது. மெக்கானிக் என்று தனது பார்ட் டைம் வேலையை சொல்லி முதல் மனைவி சரசுவதியை திருமணம் செய்தார் ராதா. சிறிது காலத்துக்குப் பின் சரசுவதியின் தங்கை தனலட்சுமியையும் மணந்து கொண்டார்.
இறுதி மூச்சுவரை ராதா பின்பற்றியது பெரியார். இந்தியாவின் சிறந்த தலைவர் யார் என்று கேட்டால் பெரியார் என்றே சொல்வார் ராதா. அதே நேரம் தி. க. உட்பட எதிலும் உறுப்பினர் அல்ல ராதா. இறுதி வரை சுதந்திர பறவையாக வாழ்ந்தவர் அவர்.
ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட எம். ஆர். ராதா பிறந்தது சென்னையிலுள்ள சூளை. வருடம் 1907. தந்தை ராஜகோபால் நாயுடு முதலாம் உலகப் போரில் ரஷ்ய எல்லை பஸ்ஸோவியாவில் மரணமடைகிறார். தாய் ராசம்மமாள். உடன் பிறந்தவர்கள் அண்ணன் ஜானகிராமன், தம்பி பாப்பா.
ராதா கலகக்காரரா என்றால் இல்லை.
வாழ்வதற்காக கூழை கும்பிடு, குறுக்கு வழி என்றிருப்பவர்கள் மத்தியில், தன்மானத்தை இழக்காத ராதாவின் சுயமரியாதை வாழ்க்கை மற்றவர்களுக்கு கலகமாக தோன்றியதில் வியப்பில்லை.
No comments:
Post a Comment