Tuesday, April 10, 2012

 

‘3’ விமர்சனம் ஐஸ்வர்யா தப்பி விட்டார்




பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் ‘3’ என்னவாகப் போகிறதோ... என்பது தான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.
ஆனால் ஐஸ்வர்யா தப்பித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா.... இருக்கத்தானே செய்யும்), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது.
பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை 3ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்!
ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.
ப்ளஸ்டூ படிக்கும் தனுஷ¤க்கும் ஸ்ருதிக்கும் காதல். (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷ¤க்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய், இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக்கதை.
எல்லோரும் ஏக்கத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் படம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி.
ட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் சிறப்புக்குறியன. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்தத் திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி. பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள்.
அதென்னமோ தொடர்ந்து தனுஷ¤க்கு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்டியிருக்கிறார்.
இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும்பாடு... வாவ்! நடிப்பா இயக்கமா.... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல! ஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது.
இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள்.
அம்மணி! இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா! சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்பிரியா, ரோகினி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.
இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை. (நண்பன் ஒருவனைத் தவிர)
அடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப்பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது. பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது. ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக நான் இயக்குநர் ஐஸ்வர்யா என்று சொல்லிக் கொள்ளலாம்.

 

தமிழ் படத்தில் அமிதாப்பச்சன்



பொலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சன் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். காமராஜ், முதல்வர் மகாத்மா போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் பாலகிருஷ்ணன் அடுத்து இந்தியா-பாகிஸ்தான் உறவை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் தான் ஒரு முக்கிய ரோலில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறாராம். இது குறித்து பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது, வியாபாரம் செய்வதற்காக இந்தியா வந்து கடைசியில் நம்மை அடிமைப்படுத்திய இங்கிலாந்துடன் இந்தியா இன்று நட்பு பாராட்டுகிறது. ஆனால் அதே நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் பகையில் இருக்கிறது.
நான் இயக்கப் போகும் புதிய படம் இந்தியா - பாகிஸ்தான் உறவை பற்றியது. இப்படம் பாகிஸ்தானின் ஜின்னா முதல் இப்போது கசாப் வரை உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்படும். இதில் முக்கிய ரோலில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக அவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று
கூறியுள்ளார்.

சில்க் ஸ்மிதா வேடத்தில் அனுஷ்கா


இந்தியில் சக்கைப் போடு போட்டு, தேசிய விருதையும் வாங்கிய டர்டி பிக்சர், விரைவில் தமிழில் தயாராகிறது. மறைந்த தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில், வித்யா பாலன் நாயகியாக அசத்தியிருந்தார்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது. இப்படத்தை தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டிருந்தனர். இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு, இரு மொழிகளிலும் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். தமிழில் சில்க் ஸ்மிதா வேடத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க பேசி வருகிறார்களாம்.
சில்க் ஸ்மிதா வேடத்துக்கு அனுஷ்காதான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்துள்ளனர். அனுஷ்காவுக்கும் இதில் நடிக்க விருப்பம் தானாம். சம்பளத் தொகை சரியாகிவிட்டால், தமிழ், தெலுங்கில் அவர்தான் நாயகி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.


 

தங்கையை நடிக்க வைக்க லட்சுமிராய் முயற்சி


கற்க கசடற படம் மூலம் தமிழில் நாயகியானவர் லட்சுமிராய். ‘தாம் தூம்’ படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்தார். காஞ்சனா, மங்காத்தா படங்கள் அவரை பிரபலப்படுத்தின. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
லட்சுமிராய்க்கு ரேஷ்மா, அஸ்வினி என இரு சகோதரிகள் உள்ளனர். இதில் அஸ்வினியை நாயகியாக்க முயற்சித்து வருகிறார். அவரை எப்போதும் தன்னுடனேயே அழைத்து சென்று இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அறிமுகம் செய்கிறார். கதையும் கேட்கிறார்.
விரைவில் அஸ்வினி நாயகியாக அறிமுகமாக உள்ளார். லட்சுமிராய் தற்போது இசை என்ற தமிழ்ப் படத்திலும் ஒரு மலையாள படத்திலும் கன்னடம், இந்தி, தெலுங்கில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் இவை ரிலீசாக உள்ளன.

 

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குரிய காரணம் என்ன?


தமிழில் கவர்ச்சியாக கலக்கிய நடிகை நயன்தாரா முதலில் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்டார். பின்னர் நடிகர் பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் திகதிகூட முடிவானது.
பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதலால் தன்னை தேடிவந்த பட வாய்ப்புகளை நயன்தாரா உதறித் தள்ளினார். ஒரு ஆண்டாக படப்பிடிப்பு எதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் பிரபுதேவா மனைவி, குழந்தைகளை பிரிய மனம் இல்லாமல் இருதலைக் கொள்ளியாக தவித்தார். அவரை விவாகரத்து செய்ய முடியாததால் நயன்தாரா முடிவில் மாற்றம் ஏற்பட்டது. திடீரென பிரபுதேவாவுடன் காதலையும், திருமண முடிவையும் கைவிட்டார்.
காதல் முறிவை அறிவித்த உடன், நயன்தாராவை தேடி மீண்டும் சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. தற்போது நயன்தாரா கையில் 4 படங்கள் உள்ளன. ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு, கிருஷ்ணாவின் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரு என்ற தெலுங்குப் படத்தில் அவர் நடித்து வருகிறார்.
ஐதராபாத் செட்டில் படப்பிடிப்பில் இருந்த நயன்தாராவை, சந்தித்து, பிரபு தேவாவுடன் காதல் முறிவு ஏற்பட்டதற்கு காரணம் என்ன? என்று கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:-
காதலுக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்தேன். ஆனால், திருமணம் வரை சென்ற எங்கள் காதல் முறிந்துவிட்டது. இது நடப்பது தான். இது என் விஷயத்தில் மட்டுமல்ல, எந்தவொரு காதலையோ அல்லது திருமணத்தையோ எடுத்துக்கொண்டால், அதில் முறிவு ஏற்படுவது என்பது நடக்கத்தான் செய்கிறது.
பொதுவாக காதல் வாழ்க்கையிலும், திருமண வாழ்க்கையிலும், முழுவதுமாக புரிந்துகொள்ளாமை என்பது இருக்கத்தான் செய்யும். இதனால் லேசான சச்சரவுகள் வருவதுண்டு. இது ஒரு எல்லையோடு நின்று விடவேண்டும். எல்லை மீறி போகும் போதுதான், காதல் முறிவு, திருமண முறிவு ஏற்படுகின்றன. என் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது.
சில விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பிரச்சினைகளை கையாள முடியவில்லை. அல்லது தெரியவில்லை. உலகில் நிலையானது என்று எதுவும் கிடையாது. மக்கள் மாறுகின்றனர். சூழ்நிலைகள் மாறுகின்றன. செயல்பாடுகள் மாறுகின்றன. அதுபோன்றதொரு மாற்றம், என்னை பிரியச் செய்தது.
எங்கள் காதல் முறிவுக்கு பல காரணங்கள் இருக்கலாம். இதற்கு மேல் இந்த விஷயத்துக்குள் ஆழமாக செல்ல நான் விரும்பவில்லை. முழுக்க முழுக்க இது எனது சொந்த விஷயம். எனது விவகாரத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டிய அவசியமும் கிடையாது.
என்னைப் பற்றி பத்திரிகைகள் ஏதேதோ எழுதின. வதந்திகளை பரப்பின. நான் எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். இப்போது நிலைமை மாறிவிட்டது. உறவு முறிந்துவிட்டது. எப்போது ஒரு உறவு சரியாக இல்லையோ, அப்போது எல்லாமே மாறி விடுவது இயற்கைதானே?
இதற்கு நூறு காரணங்கள் இருக்கலாம். அல்லது காரணங்களே இல்லாமலும் போகலாம். நான் பிரபுதேவாவுடன் பழகியபோது, 100 சதவீதம் உண்மையாக நடந்துகொண்டேன். ஆனால், இதற்கு மதிப்பில்லை எனும்போது, உறவை முறித்துக் கொள்வதை தவிர, வேறு வாய்ப்பு என்னவாக இருக்க முடியும்?
எங்களது இந்த காதல் பாதியில் முறிந்துபோகும் என்று நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. ஆனால், வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை, என் விஷயம் உறுதிப்படுத்தியுள்ளது. காதல் வாழ்க்கையோ, திருமண வாழ்க்கையோ, இருவரிடமும் பரஸ்பரம் புரிந்துகொள்ளுதலும், விட்டுக் கொடுத்தலும் இருந்தால், அந்த வாழ்க்கை வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment