Tuesday, April 10, 2012

 

அண்ணாத்துரையை தாக்கி கண்ணதாசன் எழுதிய பாடல்




1956ல் பதிபக் தியில் தொடங்கி 1970ல் நடிகர் திலகத்தை வைத்து கடைசியாக இயக்கிய பாதுகாப்பு வரையில் ‘ப’ மற்றும் ‘பா’ வரிசையில் மட்டுமே படங்களை இயக்கிய பீம்சிங் (விதிவிலக்கு ராஜாராணி, சாந்தி) அந்த வரிசையில் இயக்கிய அற்புதப் படைப்பால் படித்தான் மட்டும் போதுமா.
1962ல் வெளியான படித்தால் மட்டும் போதுமா படப்பிடிப்பு 1961 லேயே நடந்து வந்தது. அப்போதுதான் கவிஞர் கண்ணதாசன் தி. மு. க. வை விட்டு விலகி (ஏப்ரல் 11, 1961) ஈ. வெ. கி. சம்பத் தலைமையில் தமிழ் தேசியக் கட்சியைத் துவங்கி அதில் முக்கிய பொறுப்பிலிருந்தார். அப்போது அவர் எழுதிய பாடல்களிலும் கட்டுரைகளிலும் தி. மு. க. தலைவர் அண்ணாதுரையை கடுமையாக தாக்கி வந்தார்.
அந்த நேரம் பார்த்து இயக்குனர் பீம்சிங், படித்தால் மட்டும் போதுமாவுக்காக, தம்பியை ஏமாற்றிய அண்ணனைப் பற்றி பாடல் எழுத வேண்டும் என்று கேட்டபோது கவிஞருக்கு அண்ணாத்துரையை தாக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது என்று மகிழ்ந்து உடனே விஸ்வநாதன், ராமமூர்த்தி குழுவினருடன் அமர்ந்து விட்டார்.
அவர் பாடல் வரிகளைச் சொல்லச்சொல்ல இவர்களுக்கு சிவாஜியை ஏமாற்றிய பாலாஜியைப் பற்றித்தான் சொல்கிறார் என்று நினைத்தார்கள். படம் வெளியான பின்புதான் கவிஞர் சொன்னார். அது அண்ணாத்துரையை தாக்கி நான் எழுதியது என்று. கவிஞரைப் பொறுத்த வரை அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னுடைய சொந்த விஷயங்களுக்கு சினிமா பாடல்களை பயன்படுத்திக் கொள்வது வழக்கம்.

அண்ணன் காட்டிய வழியம்மா - இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா - என்
கையே என்னை அடித்ததம்மா.

9 வயதில் பட்ட துன்பத்தை வார்த்தைகளால் கூற முடியாது


மனோரமா மனம் திறந்து கூறுகிறார்

நான் பாடத் தெரிந்தவள் என்பதினால் எனக்குக் கிடைத்த ஒரு சலுகையும் உண்டு. பள்ளிக்கூடம் போய் வந்தபிறகு பலகாரம் விற்க எங்கள் ஊர் சினிமா டெண்ட் கொட்டகைக்குப் போவேன். அங்கே பலகாரம் விற்பதுடன் எந்தக் காட்சியிலும் எந்த நேரம் உள்ளே சென்று படம் பார்க்க எனக்கு இலவச அனுமதியும் உண்டு.
‘பாட்டுப் பாடுற பொண்ணு. படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்’ என்று பிரியமாக விட்டுவிடுவார்கள். நானும் அவ்வப்போது உள்ளே போய் சிறிது நேரம் பாட்டுகள் வரும் காட்சிகளைப் பார்த்துவிட்டு வருவேன். அதோடு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யாராவது படம் பார்க்க போனால், ‘பாப்பா வா’ என்று என்னையும் படம் பார்க்கக் கூட்டிப் போவார்கள்.
இப்படியே படம் பார்த்தும், கிராமபோன் ரெக்கார்டுகளைக் கேட்டுமே எனது இசைஞானம் வளர்ந்தது.
இந்த நிலையில்தான் என் அம்மாவுக்கு பயங்கரமான ரத்தப் போக்கு நோய் வந்தது. மனக்கவலை வறுமை - தினத்தோறும் நெருப்புடன் நடத்தும் கடுமையான உழைப்பு - இவை எல்லாமாகச் சேர்ந்து இந்த நோயைக் கொடுத்துவிட்டன.
உள்ளூரிலோ மருத்துவ வசதி இல்லை என்ன செய்வது?
இக்கட்டான இந்த நேரத்தில் தயாள மனம் கொணட ஒருவர் உதவிக்கு வந்தார் அவர் அம்மாவை இராமனாதபுரம் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார். எனக்கு என் அம்மாதான் உலகம். என் அம்மாவுக்கு நான்தான் உலகம். உங்களுக்கு என்று வேறு யாரும் கிடையாது. அதனால் என் அம்மா சேர்ந்திருந்த அரசாங்க மருத்துவமனைக்குப் போய் அம்மாவுக்குத் துணையாக இருந்து வந்தேன்.
அந்தநேரம் எனது பள்ளிக்கூட ஆசிரியர்கள் எல்லாம் ரொம்பவும் வருத்தப்பட்டார்கள். ‘நல்லாப் படிக்கிற பொண்ணு. இப்படி வீணா படிப்புக் கெட்டுப் போகுதே’ என்று வருந்தி னார்கள். சில ஆசிரி யர்கள் என்னைத் தங்கள் சொந்தப் பொறுப்பில் வைத்துப் படிக்க வைப்பதாகக் கூறினார்கள்.
ஆனால், அந்தச் சின்னஞ்சிறு வயதில் அம்மாவைப் பிரிந்து எப்படி என்னால் தனியாக இருக்க முடியும். அம்மாவுக்கும் வேறு துணை யார் இருக்கிறார்கள்? அதனால் அம்மா கூடவே இராமனாதபுரம் போய்விட்டேன்.
அம்மாவின் கடுமையான ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது.
இந்த ஒரு வருடமும் தினசரி என் அம்மாவின் சேலைகளை இரண்டு முறை துவைத்து, காய வைத்துக் கொடுப்பேன். இன்னும் சொல்லப்போனால் அந்தச் சேலைகள் கூட மருத்துவமனையில் தரப்பட்ட சேலைகள் தான். சொந்தமாக உள்ளது ஒரேயொரு சேலைதான்.
அப்போதும் என் அம்மா ரத்தம் தோய்ந்த சேலையோடேயே இருப்பார். அப்படி எந்த நேரமும் ரத்தப் போக்கு இருந்துகொண்டே இருக்கும்.
இந்த ஒரு வருடமும் நாங்கள் பட்ட துன்பத்திற்கு ஒரு எல்லை கட்டிச் சொல்லவே முடியாது.
என் அம்மாவுக்குத் தரப்படும் மருத்துவமனைச் சாப்பாடைத்தான் இருவரும் பங்கு போட்டுச் சாப்பிடுவோம். அவர்கள் தருவதே கொஞ்சம் இதில் இரண்டு பேருக்கு எப்படிப் போதும்? தினசரி அரைப்பட்டினி, கால் பட்டினிதான்.
பகலில் அம்மா கூட இருப்பேன். இரவில் ஆஸ்பத்திரியின் வராந்தாவில் படுத்துக்கொள்வேன்.
எப்போதாவது தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் ஏதாவது உதவி கேட்டுப் பெற்றுக்கொள்வேன்.
மொத்தமாக பிச்சை எடுக்கவில்லை, திருடவில்லை. மற்றப்படி எல்லா விதத் துன்பங்களையும் அனுபவித்து விட்டோம். அதுவும் அந்த ஒன்பது, பத்து வயதில் பட்ட துன்பம் இருக்கிறதே - அதை எந்த வார்த்தையால் விளக்கமுடியும்?
ஓராண்டுக்கால மருத்துவமனை வாழ்க்கையில் ஓரளவு அம்மாவின் உடம்பு தேறியது. நாங்கள் மீண்டும் பள்ளத்தூர் வந்தோம். முன்போல் வேலை பார்க்கும் சக்தி அம்மாவுக்கு இல்லை. இனி என்ன செய்வது அடுத்த நேரச் சாப்பாடிற்கு? வறுமை எங்கள் முன் பெரிதாக உருவெடுத்து நின்றது!
இன்றைய தினம் மனோரமா மிகவும் வசதியாக வாழ்வதாக பலர் நினைக்கலாம். ஆனால் இந்த வாழ்க்கையை வந்தடைய எவ்வளவு கொடிய வழிப்பயணம் செய்திருக்கிறோம் என்பதை இப்போது எண்ணிப் பார்க்கையில் உடம்பு நடுங்குகிறது.
பள்ளத்தூரில் வசதி படைத்த செட்டியார் குடும்பங்கள் நிறைய உண்டு வசதியற்ற குடியானவர்கள் இந்தச் செட்டியார் குடும்பங்களில் மாதச் சம்பளத்திற்கு பண்ணை வேலை அல்லது வேறு வேலைகளில் சேர்ந்தறுப்பார்கள்.
அதேபோல் வீட்டு வேலைகளுக்கு பெண் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வார்கள்.
எங்களின் நிர்க்கதியான நிலையைப் பார்த்த அக்கம்பக்கத்துக்காரர்கள் என் அம்மாவிடம் ‘உனக்கோ உடம்புக்கு முடியலை. பாப்பாவும் பட்டினி கிடந்து சாகிறதா! அதனால் யாராவது ஒரு செட்டியார் வீட்ல பிள்ளை பார்த்துக்க அனுப்பி வை. மாதத்துக்குச் சம்பளமும் கிடைக்கும் பிள்ளைக்கு வயிறார மூணு வேளையும் சோறும் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
பசி – பட்டினியின் துன்புறுத்தலால் மற்றவர்களின் சொல்லுக்கு செவிசாய்த்துவிட்ட என் அம்மா ஒரு செட்டியார் வீட்டில் குழந்தை பார்த்துக்கொள்ள ஒரு அம்மா மூலம் அனுப்பி வைத்தார்.
அங்கே உள்ள ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்வதும், அதற்குத் தேவையானதைச் செய்வதும்தான் எனக்கு வேலை.
நான் வேலைக்குப் போன முதல் நாள். கீழே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி என் தோள்பட்டையில் சாய்த்து செல்லமாகத் தட்டிக் கொடுத்ததுதான் தாமதம். அந்தக் குழந்தை ‘சரக்’ என்று என் தோள்படையில் கடித்துவிட்டு, ‘வில்’ என்று கத்தியபடி ஏற்கனவே அங்கே வேலை செய்யும் ஆயாவிடம் ஓடிப்போய் ஒண்டிக்கொண்டுவிட்டது.
முன்பின் பழக்கம் இல்லாததால் அந்தக் குழந்தை என்னிடம் வர மறுத்தது.
என்னை வேலைக்குச் சேர்த்தது குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக ஆனால் குழந்தையோ என்னிடம் வர மறுத்து வேலைக்கார ஆயாவிடம் ஓடுகிறது.
பிள்ளையை வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் வீட்டை விட்டுப் போகச்சொல்லி விடுவார்கள்.
பிறகு சாப்பிடச் சோறு கிடைக்காதே! இந்த எண்ணம் ஏற்பட்டதுமே எனக்கு அடி வயிறு ‘பகீர்’ என்றது. வறுமை எங்களை அந்த அளவிற்கு வாட்டி இருந்தது.
வேலைக்கு என்று வந்து ஒரு வேளைச் சோறுகூட ஒழுங்காகச் சாப்பிடாததற்குள் இந்த நிலைமையா
எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. அந்த நிலைமையிலும் எனக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது நான் வேலைக்குச் சேர்ந்த செட்டியார் வீடு மிகப் பெரிய வீடு. ஒரு நாளைக்கு ஏராளமான விருந்தாளிகள் வந்து போகும் இடம். அதனால் அந்த வீட்டில் எப்போதும் பெரிய விருந்து போலவே சமையல் நடக்கும். வேலைப்பளு அதிகம்.
ஏற்கனவே உள்ள வேலைக்கார அம்மாவுக்கு 40 வயது இருக்கும். அந்த அம்மா, சமையல் பாத்திரங்கள் கழுவுவது தண்ணீர் இறைப்பது, வீட்டைக் கூட்டுவது, சமையலுக்கான மிளகாய் மற்றும் மசாலா சாமான்கள் அரைத்துக் கொடுப்பது மற்றும் சில்லறை வேலைகள் செய்வது வழக்கம்.
‘அடுத்து சாப்பாட்டிற்கு என்ன செய்வது?’ என்ற பய உணர்ச்சி ஏற்பட்டதுமே உடனே அந்த அம்மாவிடம், ‘ஆத்தா, உங்க வேலைங்களை எல்லாம் நான் பாத்துக்கறேன் நீங்க இந்தக் குழந்தையைப் பார்த்துக்குங்க இல்லாட்டி என்னெ போகப் சொல்லிடுவாக’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.
அந்த அம்மாவும் அன்று முதல் பிள்ளை பார்த்துக் கொள்ளவும், நான் அவருடைய வேலைகளைப் பார்க்கவும் ஆரம்பித்தோம்.
அதுமுதல் எனக்கு ஓய்வு ஒளிவு இல்லாத வேலை தொடங்கியது. பசியின் கொடுமை எனது வயதுக்கு மீறிய வேலைச் சுமையை என் தலையில் ஏற்றியது.
இதே நேரத்தில் எனது தாயாரும் வேறு ஒரு செட்டியார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார்.
பொதுவாக செட்டியார் வீடுகளில் வேலை செய்யும் சின்னப் பெண்களை ‘குட்டி’ என்று கூப்பிடுவார்கள். நான் வேலைக்குச் சேர்ந்திருந்த செட்டியாரின் வீடு என்கூட ஒரே வகுப்பில் படித்த சக தோழி ஒருத்தியின் தாத்தா வீடு. அந்த வீட்டிலேயே அவளும் வளர்ந்தாள். படிப்பில் அவள் மிகச் சுமார் ரகம். சாதாரணமாக எந்தப் பாடமும் அவள் மண்டையில் ஏறமாட்டேன் என்று படிவாதம் பிடிக்கும். அதனால் அவள் எப்போதும் என்னைப் பார்த்துக் காப்பியடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாள். அதற்காகவே பள்ளி நேரம் முழுவதும் ‘பாப்பா - பாப்பா’ என்று என்னையே சுற்றிக்கொண்டிருப்பாள்.
அந்த வீட்டில் எல்லோரும் என்னை ‘குட்டி’ என்று கூப்பிடுவார்கள். அவர்களைப் போலவே என்கூடப் படித்த எப்போதும் ‘பாப்பா... பாப்பா’ என்று குழையவரும் சகதோழியும் ‘குட்டி’ போட்டுக் கூப்பிட்டாள்.
மற்றவர்கள் கூப்பிட்டதைப்பற்றி நான் எதுவும் அக்கறை கொள்ளவில்லை. ஆனால், என் கூடப் படித்தவள் - என்னைப் பார்த்து ஒவ்வொரு பாடத்தையும் காப்பியடித்தவள் - ‘பாப்பா - பாப்பா’ என்றவள் வழக்கத்தை மாற்றி ‘குட்டி’ என்று கூப்பிட்டதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவள் கூப்பிட்டதைக் கேட்டதும் என் முகமெல்லாம் ஜிவ்வென்று சிவந்து வேர்த்துவிட்டது. உடம்பெல்லாம் கூனிக் கூசி - குறுகி - கண்கள் நீர்கொண்டு விட்டன. ஏனோ என்னால் அவள் அப்படிக் கூப்பிடுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தத்தளித்தேன் என்றாலும், என்னால் என்ன செய்ய முடியும்?
இந்தக் காட்சிதான், இன்றுவரை என் வீட்டில் வேலை செய்யும் எந்தப் பணியாளரையும் மனம் கோணும்படியாகவோ, மரியாதைக் குறைவாகக் கூப்பிடவோ நடத்தவோ, இடம் வைக்காமல் செய்தது. வேறு யாரையும் என் வீட்டில் பணியாற்றுபவர்களை மரியாதைக் குறைவாக அழைப்பதையும் அனுமதிப்பதில்லை.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த வீட்டின் தலைமைச் சமையல்காரர் அந்தச் செட்டியார் பெண்ணை தனியாகக் கூப்பிட்டு,
‘உன் கூடப் படித்துக் கொண்டிருந்த உன் வயதையொத்த பொண்ணுதானே பாப்பா. நீ அதை குட்டி என்று கூப்பிட்டால் அது மனம் வருத்தப்படாதா. இனி அப்படிக் கூப்பிடாதே’ என்று கண்டித்திருக்கிறார்.
அதன் பிறகு அவள் என்னை ‘குட்டி’ என்று கூப்பிடவில்லை. ஆனாலும் அந்த நிகழ்ச்சி மட்டும் என் இதயத்தில் ஆழமாகக் காயப்படுத்தி விட்டது!

கதாநாயகனாகவும் நடித்த அசோகன்


வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ்ப்பட உலகை கலக்கியவர் அசோகன். எம்.ஜி. ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர். அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்து “பி.ஏ” பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களிலேயே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார்.
பின்னர் சினிமாவில் நுழைந்த அவர் சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும், பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார்.
ஒளவையார், மாய மனிதன், வீரத்திருமகன், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, உயர்ந்த மனிதன், வல்லவனுக்கு வல்லவன், தாய்க்கு தலைமகன், தாய் சொல்லை தட்டாதே, குடும்பத் தலைவன், ரிக்ஷ¡க்காரன், நான், மூன்றெழுத்து, அடிமைப்பெண், அஞ்சாத நெஞ்சங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் அசோகன்.
அசோகன் அதிகமாக நடித்தது எம்.ஜி.ஆர். படங்களில்தான். 88 எம்.ஜி.ஆர். படங்களில் அவர் நடித்துள்ளார். ஏ.வி.எம். மற்றும் தேவர் பிலிம்சார் தயாரித்த பெரும்பாலான படங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார். திரை உலகத்தினர் அனைவருடனும் இனிமையாக பழகக்கூடியவர். அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள்.
1963 இல் வெளிவந்த “இது சத்தியம்” படத்தில் அசோகன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். முதலில் இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு அசோகன் நடித்தார். சரவணா பிக்சர்ஸ் ஜி.என். வேலுமணி இப்படத்தை தயாரித்தார். டைரக்ஷன் கே. சங்கர். வசனம் மா. லட்சுமணன், இசை விசுவநாதன் ராமமூர்த்தி.
இந்தப் படம் இந்தியில் “சேஷநா” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அடுத்து 1964 இல் சின்னப்பதேவர் தயாரித்த ‘தெய்வத்திருமகள்’ என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி. அடுத்து 1965 ஆம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன.
அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த தண்டாயுதபாணி பிலிம்ஸ் “காட்டு ராணி” இதில் அசோகனுடன் கே.ஆர். விஜயா நடித்திருந்தார். கதை, வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். டைரக்டர் எம்.ஏ. திருமுகம். மற்றொரு படம் ஏ. காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த “கார்த்திகை தீபம்.” அசோகன், வசந்தா நடித்திருந்தனர்.
மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர். சுந்தரம் தயாரித்து இயக்கிய “வல்லவனுக்கு வல்லவன்” படத்தில் அசோகன் மணிமாலா இணைந்து நடித்தார்கள். இது வெற்றிப்படமாகும். அதன் பின்னர் வில்லன் வேடங்களிலேயே ஏராளமான படங்களில் நடிக்கலானார்.
அசோகன் தனது மூத்த மகன் பெயரில் “அமல்ராஜ் மூவிஸ்” என்ற படக்கம்பெனி தொடங்கினார். அதன் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த “நேற்று இன்று நாளை” என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இரவும் பகலும் என்ற படத்திலும் “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்” என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி நடித்தார்.
அசோகனுக்கு 1982 ஆம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது.
அவரை வட பழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 3 மாதம் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற்றார். 19.11.1982 அன்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து அவரை டொக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. அன்று இரவு 9.35 மணி அளவில் அசோகன் உயிர் பிரிந்தது.
கிறிஸ்தவரான அசோகன் இந்து மதத்தைச் சேர்ந்த சரஸ்வதியை காதலித்து மணந்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு அமல்ராஜ், வின்சென்ட் என்ற 2 மகன்கள்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவ முறைப்படி அசோகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அசோகன் மரணம் அடைந்தபோது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். டில்லியில் இருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். வெளியிட்ட அனுதாபச் செய்தியில் கூறியிருந்ததாவது:
“நடிகர் அசோகனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் என்னுடைய இனிய நண்பர். கலை உலகம் ஒரு நல்ல கலைஞரை இழந்துவிட்டது. அசோகனின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறி இருந்தார்.

நகைச்சுவையை பாடல்கள் மூலமும் தரலாம்



உணர்த்திய ஜோடி மதுரம் - கிருஷ்ணன்


டி.ஏ. மதுரம் (1918-1974) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையும் பாடகியும் ஆவார்.
திருச்சியில் 1918 ஆம் ஆண்டு ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்தார். மதுரத்தின் கலை வாழ்க்கையும் வாய்ப்புகளும் அவரது கணவரும் திரைப்பட நடிகருமான கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் இணைவால் மலர்ச்சி பெற்றன.
ஆனால் கிருஷ்ணன் திரை அறிமுகம் பெற்ற 1935 லேயே தனிப்பட்ட முறையில் மதுரமும் திரைப் பிரவேசம் செய்து விட்டார். அப்போது அவர் பெயர் டி. ஏ. மதுரம் அல்ல, டி. ஆர். ஏ. மதுரம், ஆர். சென்ற பிறகுதான் அவரது திரைவாழ்க்கை திருப்பம் கண்டது.
திருப்பூர் டாக்கீஸ் லிமிடெட் புனேவில் எடுத்த படம் ‘வசந்த சேனாவில் (1936) கிருஷ்ணனுடன் முதன் முதலாக நடித்தார். அந்த நாள் முதல் அவரின் இணையாகவே நடித்துள்ளார். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமன்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என தனது கணவருடன் நிரூபித்தவர். சொந்தக் குரலில் பல பாடல்களை பாடியுள்ளார்.

 

சென்னையில் முதன் முதலாக தன்பெயரில் திரையரங்கை கட்டிய முதல் நடிகை

ஜpப்சி - டிரம்ஸ் நடனங்களில் புகழ் பெற்றவர்

டி.ஆர். ராஜகுமாரி (மே 5,1922 - செப்டெம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.
ராஜாயி என்னும் இயற் பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ்பெற்ற இசை (சங்கீத) மேதை, பிறந்த சில நாட்களில் தகப்பனாரைப் பறிகொடுத்தவர். இவர் திருமணமே செய்து கொள்ளாமல் தன் சகோதரர் டி. ஆர். ராமண்ணா குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.
1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மந்தாரவதி, சூர்யபுத்ரி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தையும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது.
ராஜகுமாரி பல புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். பி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக்கொடுத்து.
இதில் எம். கே. ராதாவுக்கு ஜோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ‘ஜிப்சி’ நடனம் மற்றும் உச்ச கட்ட காட்சியில் ஆடிய ‘டிரம்ஸ்’ நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுக்களைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.
கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்த சேனையாக இவர் தோன்றி நடித்திருந்தார். எம். கே. தியாகராஜா பாகவதர். பி. யு. சின்னப்பா, எம். கே. ராதா டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி.ஆர், சிவாஜி கணேசன் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ்பெற்றவர் ராஜகுமாரி சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவர்தான்.
எம். ஜி. ஆருடன் பணக்காரி (1953) இலும், சிவாஜியுடன் அன்பு படத்திலும் இணைந்து நடித்தார். தனது 37 ஆவது வயதிலும் 1959 இல் சிவாஜியுடன் இணைந்து தங்கப்பதுமையில் நடித்திருந்தார்.
இவர் 1963 இல் கடைசியாக இரண்டு படங்கள் நடித்தார். கவியரசர் கண்ணதாசன் தயாரித்த வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாகவும், டி. ஆர். ராமன்னா¡வின் இயக்கத்தில் வெளிவந்த பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஜி.ஆருக்குச் சகோதரியாகவும் நடித்திந்தார் அதற்குப் பின் படங்களில் நடிக்கவில்லை.


கமலின் பின்னால் ஹாசன் எப்படி வந்தது




கமல் ஹாசன் - கமலின் பின்னால் தொக்கி நிற்கும் ஹாசன் எப்படி வந்தது தெரியுமா?
கமல்ஹாசன் - கமலின் பின்னால் தொக்கி நிற்கும் ஹாசன் என்ற இஸ்லாமிய பெயரால், வெளிநாட்டு விமான நிலையங்களில் பல முறை அவர் அதீத சோதனைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்.
அந்தப் பெயர் அவருக்கு எப்படி வந்தது தெரியுமா? சுதந்திர போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன், சிறையில் இருந்த பிராமண எதிர்ப்பு தரப்பினரால் அவருக்கு அங்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது.
அப்போது ஸ்ரீநிவாசனை பாதுகாத்தது சிறையில் அவருடன் அடைக்கப்பட்டிருந்த மற்றொரு விடுதலை போராட்ட வீரர் யாகோப் ஹாசன் அவரின் நினைவாகத்தான் மகன்கள் அனைவருக்கும், சந்திரஹாசன், சாருஹாசன்.
கமல்ஹாசன் என்று பெயர் வைத்துள்ளார் ஸ்ரீநிவாசன். ஆனால் ஹாசன் என்பது சமஸ்கிருதம் என்றும், அதற்கு ஹாஸ்யம் என்று அர்த்தம் என்றும் ஒரு தகவல் உலாவிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment