விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
`மெளனராகம்' தொலைக்காட்சி தொடாின் கதையே ஒரு சிறுமி தனது பாடல் திறமையால் இந்த உலகுக்குத் தன்னை அடையாளப்படுத்த விரும்புவதே. அதில் கிருத்திகா எனும் சிறுமி மிக அழகாக நடித்துவருகிறார். அவர் பாடுவது போன்ற காட்சிகளைப் பார்க்கும்போது சொந்தக் குரலில் அவரே பாடுகிறாரோ என நினைக்கவைக்கும். ஆனால் அவருக்குப் பின்னணி பாடியிருப்பவர் எட்டாம் வகுப்புப் படிக்கும் வர்ஷா.
மெளனராகம்' பாடலை வர்ஷா பாடிய காட்சி யூ- டியூப்பில் நான்கரை இலட்சம் பார்வையாளர்களைக் கடந்துவிட்டது. இவர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறார் வர்ஷா. சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் பாடல் ஒன்றும் பாடியிருக்கிறார். சின்ன வயதில் இவ்வளவு ஆச்சர்யங்களைத் தரும் வர்ஷாவிடம் `எப்போதிருந்து சங்கீதம் கத்துக்கறீங்க?" எனப் பேச்சைத் தொடங்கியதும்.
சின்னச் சிரிப்புடன், ``நான் முறைப்படி சங்கீதம் கத்துக்கலை. அப்பா ரஞ்சித் வாசுதேவ், சித்தார், மிருதங்கம், தபேலா, கீபோர்ட், டோலக் எனப் பல இசைக்கருவிகளை வாசிப்பார். பாடல்கள் பாடியிருக்கார். படங்களுக்கு இசை அமைத்திருக்கார். அண்மையில் `செம்மறி ஆடு' படத்தில் அவர் இசையமைப்பில் நான் ஒரு பாட்டு பாடியிருக்கிறேன். அம்மா பாட்டு ஆசிாியர். இவங்கக்கிட்ட கத்துக்கிட்டதோடு சரி. லெவன்த் படிக்கும் அண்ணன் டிரெம்ஸ் கத்துக்கிட்டிருக்கான். அவனோடு நிறைய சண்டை, கொஞ்சம் சமாதானம்னு இருப்பேன். எனக்கு ரெண்டு ஆசை. ஒண்ணு, சிங்கர் ஆகணும். இன்னொண்ணு டொக்டர் ஆகணும். அப்பா நான் விரும்பும்போது, பாட்டு பிராக்டீஸ் பண்ணவும், பாடம் படிக்கவும் விடுவாங்க. ஆனா அம்மாதான் கொஞ்சம் ஸ்ட்ரிக்.மலையாளத்தில் `வானம்பாடி' என்ற சீரியலுக்கு மியூசிக் ஜெயசந்திரன் அங்கிள்தான். அவர் அப்பாவுக்கு குளோஸ் ஃப்ரெண்ட். அவருக்கு என் குரல் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதனால் என்னை அந்த தொலைக்காட்சி தொடரில் பாட வைச்சார். அவர்தான் `மெளனராகம்' தொடரின் மியூசிக் டைரக்டர். அதனால் நான் பாடறதுக்கு சான்ஸ் கிடைச்சது. பழநிபாரதி அங்கிளின் வரிகள் எல்லாம் சூப்பரா இருந்துச்சு. நீங்க சொல்ற மாதிரி, சீரியலில் நடிக்கும் கிருத்திகாவே அந்தப் பாட்டைப் பாடுற மாதிரி இருக்குனு நிறைய பேர் சொல்றாங்க. அந்தளவுக்கு என் குரல் அவங்களுக்குப் பொருத்தமா இருக்குதுன்னா எனக்கும் ரொம்ப சந்தோஷம். பலரும் அப்பாவுக்கு போன் பண்ணி என்னைப் பாராட்டறாங்க. ஒருநாள் பெரியப்பாகிட்டேயிருந்து போன் வந்துச்சு. (அவரும் மியூசிக் டைரக்டர்தான்) நான் பாடினதை எஸ்.பி.பி அங்கிள் யூ-டியூப்பில் பார்த்தாராம். உடனே போன் பண்ணி, `வர்ஷா ரொம்ப நல்லா பாடியிருக்கா, நல்ல எதிர்காலம் இருக்கு. என் ஆசிர்வாதங்களைச் சொல்லு'னு சொன்னாராம். இதைக் கேட்டதும் எனக்குக் காத்துல பறக்கிற மாதிரி இருந்துச்சு. " எனச் சொல்லும் வர்ஷாவின் குரலில் அவ்வளவு சந்தோஷம்.
`சினிமாவில் பாடும் வாய்ப்புகள் வருகிறதாமே?' என்றதும், `நிறைய வருது. `டிராஃபிக் ராமசாமி' படத்தில் `போராளி அனந்தம்...' பாடலில் நானும் பாடியிருக்கேன். வித்யாசாகர் அங்கிள் மியூசிக்ல, பா.விஜய் ஹீரோவாக நடிக்கும் `ஆருத்ரா' படத்தில் `செல்லம்மா செல்லம்' என்ற பாடலை சமீபத்தில் பாடினேன். கார்த்திக் சாரும் நானும் சேர்ந்து பாடியிருக்கும் டூயட் பாடல். இதன் ஓடியோ ஃபங்ஷனில் `இந்தப் படத்துல பா.விஜய் பாடகராக அறிமுகமாகிறார். அவர் மட்டுமல்ல வர்ஷாவும்தான். வர்ஷாவோட குரல் அருமையாக இருக்கும். என்கிட்ட மூணு வருஷமா பாடிட்டிருக்கா. இப்போதுதான் தனியா பாடுகிறாள். ஹீரோயினுக்குச் சின்னப்பொண்ணோட குரல் பொருந்துமான்னு சந்தேகமாக இருந்துச்சு. பா.விஜயிடம் இதைச் சொல்லி வேறு யாரையாவது பாடவைக்கலாமான்னு சொன்னப்போ, `யார் பாடினாலும் வர்ஷா பாடினது மாதிரி வராது'னு மறுத்துட்டார். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தற்கு வித்யாசாகர் அங்கிளுக்கு பா.விஜய் சாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி" என்கிறார்.
ஆருத்ரா படப் பாடலின் சில வரிகளைப் பாடச் சொன்னதும் இனிய குரலில் நிறைவாக முடித்தார்.
செல்லம்மா செல்லம்....
என் பேச்சு வெல்லம்
தித்திக்குதா... தித்திக்குதா...
குட்டிம்மாகூட குயிலம்மா பாட
ஒத்துக்குதா... ஒத்துக்குதா.
No comments:
Post a Comment