நடிகர் திலகம் சிவாஜி- பத்மினி ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி. அதேபோல சிவாஜி- தேவிகா ஜோடியும் ரசிகர்களால் விரும்பப்பட்டது.
‘வானவில்’ என்கிற நாடகத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தே தமிழ்த் திரையுலகில் கால் பதித்தார் தேவிகா. தேவிகாவின் முதல் சினிமா கதாநாயகனாக சிவாஜி அமைந்ததாலோ என்னவோ இந்த ஜோடி நடித்த படங்களில் அந்நியோன்யமான நிலை அற்புதமாக இருக்கும். அதனாலேயே இந்த ஜோடியைப் பற்றி அரசல்புரசலாக கிசுகிசுவும் கிளம்பியது. இது தேவிகாவின் தாயாரின் காதுகளுக்கும் எட்டியது. பிஸியான நடிகையாக இருந்த தேவிகா தினமும் தன் வீட்டிலிருந்து ஷூட்டிங்கிற்காக கிளம்பும்போதெல்லாம்,
“ஏதேதோ செய்தி வருதே... நிஜமா?” என கேட்பாராம் அவரின் தாயார்.
“அப்படியெல்லாம் இல்லையம்மா” என தேவிகா பதில் சொல்வது வழக்கமாம்.
ஆனால் கிசுகிசு அதிகரிக்க அதிகரிக்க தேவிகாவின் தயாரின் சந்தேகமும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில், “என்ன... சிவாஜிய கல்யாணம் பண்ணிக்கப்போறியா?” என கேள்விகளால் துளைத்தவர் உச்சகட்டமாக... “நீ வீட்டவிட்டு ஓடிப்போய் சிவாஜிய கல்யாணம் பண்ணிக்க திட்டம் போட்டிருக்கியாமே?” என்று கேட்கத் தொடங்கினார். இதனால் தேவிகாவுக்கும் அவரின் அம்மாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் நடந்திருக்கிறது. ஆனால்
தேவிகா மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை.
மதுரை ஸ்ரீமுருகன் டாக்கீஸ் குடும்பத்தைச் சேர்ந்த உதவி இயக்குநராக இருந்த தேவதாஸை திருமணம் செய்துகொண்டார் தேவிகா. சிவாஜியை “சார்” என்று அழைத்து கடைசிவரை தன் குரு ஸ்தானத்திலேயே வைத்திருந்தார்.
No comments:
Post a Comment