மீண்டும் ஒரு முறை பார்க்க மாட்டோமா என திரும்பிப் பார்க்க வைக்கும் பளிச்சிடும் காந்தக் கண்கள், பளீரிடும் வெள்ளைத்தோல் எல்லாம் இல்லை. அதனால் ஒரு பாதிப்பும் இல்லை என்பது போன்ற பாவனை, அண்ணாந்து பார்க்க வைக்கும் நெடுநெடு உயரம், கம்பீரம் பொருந்திய கணீர் குரல், ஏற்று நடிக்கும் பாத்திரம் நகைச்சுவை என்றாலும், வில்லி வேடமானாலும், குணச்சித்திரம் என்றாலும் வெகு யதார்த்தமான நடிப்பால் தப்பாமல் அதற்கு நியாயம் செய்தவர்.
இந்தத் தலைமுறையின் நினைவிலிருந்து முற்றிலும் விலகிப் போன ஒரு நடிகை. ஊடகங்களின் மொழியில் சொல்வதென்றால் பழம் பெரும் நடிகை. 50களிலும் பல படங்களில் நடித்தவர். இப்போதும் தொலைக்காட்சியில் பெரும்பாலான பழைய கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் இவரைப் பார்க்க முடியும். காந்தம் போல் கவர்ந்திழுக்கும் நடிப்புக்குச் சொந்தக்காரர். பெயரிலும் காந்தம் உண்டு. அவர் நடிகை சி.டி.ராஜகாந்தம். அன்று முதல் இன்று வரை நகைச்சுவை வளம் குன்றாத தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிக, நடிகையர் மிக யதார்த்த நடிப்பை உலவ விட்டுக் கொண்டிருப்பது பெரும் ஆறுதல்.
அப்படி ஒரு நகைச்சுவை நடிகையாகத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகி, பின்னர் வில்லத்தனம் நிரம்பிய பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தவர், இறுதிக்காலம் வரை வில்லியாகவே மாறினார். தலை முழுவதும் இலவம் பஞ்சாய் நரைத்து வெளுத்த காலத்திலும் வயது முதிர்ந்த வில்லியாக சின்னத்திரையிலும் கோலோச்சினார். ஏறத்தாழ ஐம்ப தாண்டுகளைக் கடந்து திரையுலகில் வலம் வந்தவர்.
ஆரம்பத்திலேயே கருகிய மண வாழ்வு
1917 ஜனவரி 5 அன்று கோவை யில் பிறந்தவர் சி.டி. ராஜகாந்தம். தந்தை திரவியம் ஆசாரி; தாயார் மருதாயி. குழந்தைப் பருவத்திலேயே அவரது குரல் கணீரென்று ஒலிக்குமாம். பேச்சும் கூட துடுக்கும் துடிப்பும்தான். தந்தையார் திரவியம் ஆசாரிக்கு கோவையில் தோல் மண்டி வியாபாரம். மகளுக்கு ஐந்து வயதான நிலையில் திரவியம் ஆசாரி மரணமடைய, குடும்பம் தத்தளிக்க ஆரம்பித்தது.
ராஜகாந்தத்தின் பள்ளிப் படிப்பு எட்டாம் வகுப்புடன் நின்று போனது. படிக்கும்போதே அக்கால வழக்கப்படி 15வது வயதில் திருமணம் நடந்தது. கணவர் பெயர் அப்புக்குட்டி. வாழ்க்கை மிகச் சாதாரணமாக இயல்பாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில், மிகக் குறைந்த காலமே கணவருடன் வாழ நேர்ந்த துர்பாக்கியமான நிலை. மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தபோது, கணவர் இவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அத்துடன் முடிவுக்கு வந்தது அந்த மண வாழ்க்கை.
ஜானகியால் கிடைத்த நடிப்புலக வாழ்க்கை
அப்போதைய பிரபல நாடக நடிகை கள்ளிக்கோட்டை எஸ்.ஆர். ஜானகி, 1933 ஆம் ஆண்டு நாடகம் நடத்துவதற்காகத் தன் நாடகக் குழுவினருடன் கோவை வந்தவர் மருதாயி அம்மாள் வீட்டில் தங்கியிருந்தார். பின் நாட்களில் இவர் திரைப்படங்களிலும் நடித்துப் பேர் பெற்றவர். (கண்களை உருட்டி விழிக்கும் ‘ஊமை விழிகள்’ பாட்டி என்று இவரைச் சொன்னால் இந்தத் தலைமுறைக்கு எளிதாகப் புரியும்). அங்கு தங்கியிருந்த காலத்தில் ராஜகாந்தத்தின் கம்பீரமான உருவம் மற்றும் குரலால் கவர்ந்திழுக்கப்பட்டு மயங்கியவர், அவரது தாயார் மருதாயி அம்மாளின் அனுமதி பெற்று தன் நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார்.
‘தூக்குத்தூக்கி’ நாடகத்தில் தன்னுடைய தோழியாகவும் நடிக்க வைத்ததன் மூலம் அவரை நாடக மேடைக்கு அழைத்து வந்தவர். சின்னச் சின்ன வேடங்களில் நடித்த ராஜகாந்தம், ஒரு பெண் குழந்தைக்குத் தாயான பின் தொடர்ச்சியாக நடிக்க முடியாமல் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அப்போதெல்லாம் நாடகக் குழுவுக்குள் இயங்காமல் அழைக்கும் நேரங்களில் மட்டும் வந்து சில பாத்திரங்களில் நடித்துக் கொடுத்து விட்டுப் போனார். ஒரு நாடகத்தில் நடித்தால் ஒரு ரூபாய் ஊதியம் கிடைக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் நடிப்பதன் மூலம் கிடைத்த மூன்று ரூபாய் வருமானம் அவருக்கும் அவரது மகளுக்கும் வாழ்வாதாரமாக இருந்தது.
ஒரு நாடகத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம் பெற்றவர் பின்னாளில் பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெறும் அளவுக்கு உயர்ந்தார். நாயகன், நாயகி, மற்ற கதாபாத்திரங்கள் செந்தமிழிலும் அடுக்கு மொழியிலும் சரளமாக வசனங்களைப் பேசிக் கொண்டிருக்க நகைச்சுவைப் பாத்திரங்கள் மட்டும் இயல்பான பேச்சு வழக்கிலும் கொச்சை மொழியிலும் அப்போது வசனம் பேசினார்கள். மகிழ்ச்சிக் கொண்டாட்டம் என்றாலும் சோக ரசம் சொட்டச் சொட்டப் பேச வேண்டிய காட்சிகள் என்றாலும் நாயகனும் நாயகியும் அதீத உணர்வுகளைக் கொட்டிக் கொந்தளிக்க வேண்டியிருந்தது.
ஆனால் இதற்கு முற்றிலும் நேர்மாறாக நகைச்சுவைப் பாத்திரங்கள் போகிறபோக்கில் வீட்டுக்குள் பேசுவது போன்ற தொனியில் எளிதாக வசனங்களைப் பேசிக் கடந்ததுடன் அந்தரத்தில் பறக்காமல் நம்முடன் சரி சமமாகப் பேசி நடந்து சென்றார்கள். அப்படித்தான் இயல்பான மொழி நடையில் அலட்டிக் கொள்ளாமல் வசனம் பேசி அப்போதே நகைச்சுவை நடிகையாகவும் நடிக்கத் தொடங்கி விட்டார். நாடக மேடைப் புகழும் பின்புலமும் ராஜகாந்தத்தை சினிமாவுக்கு அழைத்து வந்தன.
1939ல் மொடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமும் சேலம் ஸ்ரீகிருஷ்ணா பிலிம்ஸும் இணைந்து ‘மாணிக்க வாசகர்’ என்ற படத்தைத் தயாரித்தனர். இப்படத்தில் நகைச்சுவைப் பாத்திரம் ஒன்றில் ராஜகாந்தம் அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வந்தாலும் அப்போது சகலகலா வல்லவராக அறியப்பட்ட காளி என். ரத்தினத்துடன் ஜோடி சேரும் வரை ராஜகாந்தத்தின் சினிமா புகழ் சற்று மங்கித்தான் இருந்தது. திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும் தனக்கு வாழ்வளித்த நாடகத்தை மறந்து விடாமல் தானே சொந்தமாக ஒரு நாடகக் குழுவையும் வைத்து நடத்தியவர்.
இசை வாரிசுகளால் நிரம்பிய குடும்பம்
இவரது ஒரே மகள் ராஜலட்சுமியை நாடக நடிகரும் தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகரும் கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரருமான திருச்சி லோகநாதனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அந்த வகையில் ராஜகாந்தத்தின் மருமகனாவார். ஏராளம் இசை வாரிசுகளைக் கொண்ட மிகப் பெரிய இசைக்குடும்பம். மகள், மருமகன் இருவரின் மறைவுக்குப் பின்னும் பேரக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பெரும் பொறுப்பும் இவருக்கு இருந்தது. அதையும் குறைவறச் செய்தவர்.
அவரின் பேரன்கள் அனைவருமே மிகச் சிறந்த இசைக்கலைஞர்கள், பாடகர்கள். அவர்களில் டி.எல்.மகாராஜன், தீபன் சக்கரவர்த்தி, டி.எல்.தியாகராஜன் பேர் சொல்லும் வாரிசுகள். பெண்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்து வரும் எழுத்தாளர் அம்பை, திரைப்பட ஆய்வாளரும் சூழலியல் எழுத்தாளருமான தியோடர் பாஸ்கரனுடன் இணைந்து, சி.டி.ராஜகாந்தத்தின் நாடக, திரையுலக வாழ்க்கையைப் பற்றி ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதற்கு முன்னதாகவே ராஜகாந்தத்தின் வாழ்க்கை நிறைவு பெற்று விட்டது. நீண்ட நெடிய வாழ்க்கை வாழ்ந்து வயது முதிர்வின் காரணமாக 2003 ஆம் ஆண்டு தனது 86 வது வயதில் விடை பெற்றுக் கொண்டார் ராஜகாந்தம்
No comments:
Post a Comment