நடிகைகளின் வாழ்க்கை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்டது போலத் தோன்றலாம். ஆனால் எல்லாத் தொழில்களிலும் இருப்பதைப் போல போட்டி, பிரச்சினைகள், முன்னேற உழைக்க வேண்டிய தூரம் இவர்களுக்கும் பொருந்தும். சினிமா துறையில் அழகும் இளமையும் சேர்ந்திருப்பவர்களுக்கே முன்னுரிமை. இதைத் தாண்டி ஒரு நடிகையின் திறமையை அங்கீகரிக்கும் சூழலும் மிகவும் முக்கியம். இப்படிப் பலவிதமான சவால்களை எதிர்கொண்டு தான் நடிகைகள் திரையில் தோன்றுகிறார்கள். சமீபத்தில் இறந்த தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலின் மரணம் திரையுலகுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதிர்ச்சியான தகவல். காரணம், அவரது மரணத்துக்கான காரணம். எது அவருக்கு சினிமா வாய்ப்பையும் பிறகு பேரும் புகழையும் தந்ததோ அதுவே அவருடைய உயிருக்கும் எமனாக அமைந்துவிட்டது. 31 வயதில் ஒரு நடிகை நோய்வாய்ப்பட்டு இறப்பது என்பது நிச்சயம் விவாதிக்கவேண்டிய விஷயம்.
குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தி அகர்வால், அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் பிறந்தவர். ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டி ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்காவின் பிலடெல்பியா நகருக்குச் சென்றிருந்தபோது ஆர்த்தியை சந்திக்க நேர்ந்தது. அழகும் இளமையும் கொண்ட ஆர்த்தியைப் பார்த்தவுடன் இவர் திரைத்துறையில் இருக்கவேண்டியவர் என எண்ணினார் சுனில் ஷெட்டி. தன்னுடன் நடனம் ஆடும்படி ஆர்த்தியை அழைக்க, அவரும் ஓகே சொல்லி மேடையில் தயக்கமில்லாமல் ஆடினார். ஓடியன்ஸின் வரவேற்பும் அமோகமாக இருக்க, கூடவே சினிமா வாய்ப்பும் அவர் முன் வந்து நின்றது. டீன் ஏஜ் வயது ஆர்த்திக்கும் சினிமாவில் நடிப்பது ஒரு விருப்பமாகவே இருந்ததால் தன் குடும்பத்தினரிடம் விவாதித்தார்.
நடிகர் சுனில் ஷெட்டி ஆர்த்தியின் தந்தையிடம் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆர்த்திக்கு அனுமதி தரும்படி கேட்டுக் கொண்டார். சம்மதம் கிடைக்கவே, பல கனவுகளுடன் திரையுலகில் நுழைந்தார் 16 வயது ஆர்த்தி. 2000-ம் ஆண்டில் ‘பாகல்பன்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்தார். அந்தப் படம் சுமாராகத்தான் ஓடியது. ஆனால் அதுவே ஆர்த்திக்கு ஒரு நல்ல விசிட்டிங் கார்டாக அமைந்ததால் தெற்குப் பக்கம் வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தார். தெலுங்குப் பட உலகம் ரத்தினக் கம்பளம் போட்டு ஆர்த்தி அகர்வாலை சுவீகரித்துக் கொண்டது. டோலிவுட்டில் வெங்கடேஷ் ஜோடியாக நுவ்வு நாக்கு நச்சவ் என்ற படத்தில் நடித்து அது சூப்பர் ஹிட்டாகிவிட, தெலுங்குத் திரையுலகில் பரபரப்பான நடிகையானார் ஆர்த்தி. சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பிரபாஸ், ஜுனியர் என்.டி.ஆர். போன்ற முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க, வெற்றிப் படங்களின் எண்ணிக்கை அதிகமாகின.
தெலுங்குத் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தமிழிலும் நடிகர் ஸ்ரீPகாந்துக்கு ஜோடியாக பம்பரக் கண்ணாலே (2005) என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றிகரமாக அமையவில்லை. ஆனால் டோலிவுட்டில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக ஆனார் ஆர்த்தி.
இதற்கிடையில், தெலுங்கு நடிகரான தருணை தீவிரமாக காதலித்தார். தருண் தமிழில் புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18 ஆகிய படங்களில் நடித்தவர். தருண், ஆர்த்தி இருவரும் முதலில் காதலை மறுத்தாலும் பிறகு விரைவில் திருமணம் செய்யப்போவதாக வெளிப்படையாக அறிவித்தார்கள். அதனால் ஆர்த்திக்கு பட வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்தன. அதைப்பற்றி அப்போது அவர் கவலைப்படவில்லை. ஆனால் சில மாதங்களிலேயே தருணுக்கு அவருக்கும் பிரசசி;னை ஏற்பட்டு இருவரும் பிரிந்துபோனார்கள். தருணுக்கு, திவ்யா ரெட்டி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமான தகவல் அறிந்து ஆர்த்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அதன்பின் அவர் திரை வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலைக்கு வந்துவிட்டது.
வேறு வழியின்றி, திரையுலகத்தை விட்டு விலகி மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றார். அங்கு அவரது தூரத்து உறவினர் உஜ்வாலைச் சந்தித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உஜ்வால் குமார் அமெரிக்காவின் பிரபல வங்கி ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். 2007-ல் உஜ்வால் குமார் - ஆர்த்தி அகர்வால் திருமணம் உறவினர்கள், நண்பர்கள் சூழ ஹைதராபாத் ஆர்ய சமாஜ் ஆசிரமத்தில் நடந்தது. ஆனால் தனது திருமணத்தை ரகசியாகவே நடத்தினார் ஆர்த்தி. தெலுங்குத் திரையுலகில் யாருக்கும் அழைப்பில்லை. திருமணம் நடந்த விஷயமே செய்தித்தாள் பார்த்துதான் தெரிந்துகொண்டனர். திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார்.
அழகு, பணம், திறமை எல்லாம் இருந்தும் சிலருக்கு நிம்மதி மட்டும் இருக்காது. அதுவும் நடிகையின் வாழ்க்கை, புகழ் எனும் போதையில் சூழ்ந்தது. பரபரப்பான வாழ்க்கை முறை, ஷ_ட்டிங், ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் பாராட்டு என்று லைம்லைட்டில் இருந்துவிட்டு சும்மா இருக்க நேர்ந்தால் அது பெரும் அவஸ்தையாக இருக்கும். ஆடிய காலும் பாடிய வாயும் ஓயாது என்று ஒரு சொல்வது உண்டு. திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதால் கணவரைப் பிரிந்தார் ஆர்த்தி. அடுத்து? சினிமா வாய்ப்புகளைத் தேடி ஹைதராபாத்துக்குத் திரும்பினார்.
முதல்முறை ஹைதராபாத்துக்கு வந்தபோது கிடைத்த வரவேற்புக்கும் இப்போது அதேபோல அமெரிக்காவிலிருந்து வந்திறங்கியபோது நடந்துகொண்ட விதத்துக்கும் பெரும் வித்தியாசம் தென்பட்டது. இந்தமுறை யாரும் அவரைச் சீந்தவில்லை. காரணம் ஏற்கனவே பூசிய உடம்பாக இருக்கும் ஆர்த்திக்கு சில வருடங்களில் உடல் எடை அதிகரித்துவிட்டதுடன் வயதும் கூடிவிட்டதால் ஹீரோயினாக யாரும் அவரைக் கருதவில்லை.
ஆர்த்தி முயற்சி செய்து பார்த்தார். தன்னுடைய உடல் எடையைக் குறைக்க டயட்டிங் போன்ற விஷயங்களில் தீவிரமானார். மீண்டும் திரையில் தோன்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் அவரால் பழைய அழகை மீட்டுக்கொண்டு வரமுடியவில்லை. என்ன முயன்றும் பலன் பெரிதாக இல்லை. உடல் எடையைக் குறைத்தால் நடிக்க வாய்ப்பு தருவதாக சில திரைத்துறை நண்பர்கள் கூறவே அதை நம்பி மேலும் பலவிதமான முயற்சிகள் செய்து பார்க்கத் தொடங்கினார்.
ஒரு பெரிய திட்டத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு அட்லாண்டிக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் லிப்போசக்ஷன் எனும் எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். அவர் கால்களில், இடுப்புப் பகுதிகளில் கைகளில் உள்ள தேவையற்ற கொழுப்பை உறிஞ்சி எடுக்கும்படியான லிப்போசக்ஷன் எனும் கொழுப்பு நீக்கும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. ஆனால் அதன் பின் சில மாதங்களில் மீண்டும் உடல் எடை அதிகரிக்கவே மீண்டும் அதே அறுவைச் சிகிச்சைக்குத் தன் உடலை உட்படுத்தினார். கடைசியாக நான்காவது முறை செய்ததன் காரணமாகவே, கடந்த சில நாள்களாக மூச்சுத்திணறலால் அடிக்கடி அவதிப்பட்டார். இந்தப் பிரச்சினைக்குச் சிகிச்சை பெறுவதற்காக அதே மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. லிப்போசக்ஷன் அறுவைச் சிகிச்சையின் மோசமான பக்க விளைவுககளால் தான் ஆர்த்தி இறந்திருக்கக் கூடும் என்று காரணம் சொல்லப்படுகிறது. ஏனெனில் லிப்போசக்ஷன் செய்யும் போது கொழுப்பு குமிழ் போன்று ஏற்பட்டு இதயத்தில் சென்று அடைத்துவிட, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துபோக நேர்ந்துள்ளது.
ஆர்த்தியின் திடீர் மரணத்துக்கான காரணங்களை ஆராயும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் லிப்போசக்ஷன் பற்றிய கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன. இது பற்றிய விவாதத்தில் ப்ளாஸ்டிக் சேர்ஜன் ஸ்ரீPநிவாஸ் ஸ்வரூப் என்பவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் மருத்துவரும் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆர்த்தியின் உடல் எடை குறித்து பகிடி செய்தனர். உடல் மெலிந்திருந்தால் தான் அழகு என்ற இலக்கணத்தை இவர்களுக்கு யார் சொன்னது? பட அதிபர்களும் மீடியாவும் ஆர்த்தியின் உருவத்தைப் பற்றிய கிண்டலை செய்யாமல் இருந்திருந்தால் அவர் இன்று உயிருடன் இருந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ஒல்லி இடுப்பு தான் அழகென்று நம்பும் பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆர்த்தி, கடைசியாக ரணம் 2 என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார். அவர் இறப்பதற்கு முந்தைய நாள், அதாவது ஜூன் 5-ம் திகதி அந்தப் படம் வெளியானது. தன் அடுத்தப் பட விஷயமாக ஹைதரபாத் வரவிருந்த ஆர்த்தி, அழகு சிகிச்சை தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியபடி நிரந்தரமாக கண் மூடிவிட்டார்.
No comments:
Post a Comment