Friday, March 9, 2012


பாப்பாமலரில் பாடத் தொடங்கிய புலப்பாக்க சுசீலா


பி. சுசீலா அல்லது புலப்பாக்க சுசீலா (பிறப்பு: நவம்பர் 13.1935) இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நான்கு தசாப்தங்களாக 2500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலம்பாக்க முந்தராவ் கவுத்தாரம் என்பவர்களுக்கு பிறந்தார். சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். தந்தை ஒரு வக்கீல். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.
சுசீலா 1950ம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது பெற்றதாய் படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ம் ஆண்டில் இப்படத்தில் ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இயைமைப்பில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார்.
1955 ல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தன. சுதர்சனம் இசையமைத்த ‘டொக்டர்’ என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.
பல பாடல்களுக்கு ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். கலைமாமணி பட்டம் பெற்ற இவருக்கு ஐந்து தடவைகள் தேசிய விருதுகள் கிடைத்தன. இவர் கடைசியாக 2008ம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப் படத்தில் பொட்டு வைத்த என்ற பாடலைப் பாடினார்.
1957 ம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.


 

 

கேட்டவரெல்லாம் பாடலாம்....  பாடல் எழுந்த விதம்


கே. பாலாஜியின் ‘தங்கை’ படத்துக்காக பாடல் எழுத கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம். எஸ். வி., தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் ஏ. சி. திருலோகசந்தர் இவர்களுடன் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிர்வாகிகளும் அமர்ந்திருந்தார்கள். திருலோக் சிட்டுவேஷனைச் சொன்னார்.
கதாநாயகி கே. ஆர். விஜயாவின் பேர்த்டே பார்ட்டியில் சிவாஜி பாடுவதாக சீன் என்று சொல்ல, இதற்கு பாட்டு எழுதி ட்யூன் போடுவதை விட முதலில் ட்யூன் பண்ணிக் கொண்டு பாடல் எழுதுவது நன்றாக இருக்கும் என்று பெரும்பாலானோர் சொல்ல, விஸ்வநாதன் ஒன்று இரண்டு என நான்கு ட்யூன்களைப் போட்டு விட்டார். அப்போது வந்தது குழப்பம். நான்குமே நன்றாக இருக்கிறதே! இதில் எதை செலக்ட் பண்ணுவது என்பதுதான் குழப்பம்.
முதல் ட்யூன் கண்ணதாசனுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த ட்யூன் மெல்லிசை மன்னருக்கு பிடித்துள்ளது. மூன்றாவது இயக்குனர் திருலோகசந்தருக்கு பிடித்துப் போக நாலாவதுதான் பாலாஜிக்குப் பிடிக்கிறது. ஒவ்வொருவருமே தாங்கள் செலக்ட் பண்ணிய ட்யூன்தான் பாடலாக்கப்பட வேண்டும் என்று சாதிக்கிறார்கள்.
அப்போது கண்ணதாசன் கோபத்துடன் ‘விசு உன்னை யார் நாலு ட்யூன் போடச் சொன்னாங்க. ஒரேயொரு ட்யூன் போட்டுக் காட்டி இதுதான்னு சொல்லிட்டுப் போக வேண்டியது தானே’ என்று சொல்ல எம். எஸ். வி. முதலில் போட்டியிலிருந்து பின் வாங்கினார்.
‘சரிண்ணே நான் முதலில் விலகிக்கிறேன். நீங்க மூன்று பேரும் ஒரு முடிவுக்கு வாங்க’ என்று உட்கார்ந்துவிட்டார். ஆனால் மற்ற மூவரும் விடுவதாக இல்லை.
அப்போது வாசலில் ‘சார்... போஸ்ட்’ என்று குரல் கேட்டது. உடனே கவிஞர் ஆப்பீஸ் பையனை அழைத்து ‘யப்பா அந்த போஸ்ட்மேனை உள்ளே கூப்பிடு’ என்றார். ‘அவனை எதுக்கு கூப்பிடுaங்க?’ என்று பாலாஜி கேட்க ‘பாலு, நீ கொஞ்சம் சும்மா இரு, நாம எல்லோரும் சினிமாவில் இருப்பவர்கள். இந்த துறைக்கு சம்பந்தமில்லாத போஸ்ட் மேனை செலக்ட் பண்ணச் சொல்வோம்’ என்றார்.
போஸ்ட்மேனும் வந்தார். அவரிடம் ‘தம்பி எங்களுக்காக நீ ஒரு அரை மணி நேரம் ஒதுக்க முடியுமா?’ என்று கேட்க ‘சரி சொல்லுங்க சார்’ என்றார்.
‘இது ஒரு பேர்த்டே பார்ட்டியில் பாடும் பாட்டு. இப்போ நாங்க நாலு மெட்டு போட்டுக் காட்டுவோம். அதுல உனக்கு எது பிடிக்கிறதுன்னு நீ சொல்லணும்’ என்று சொல்லி விட்டு ‘விசு அந்த நாலு ட்யூன்களையும் வாசித்துக் காட்டு’ என்று சொல்ல எம். எஸ். வியும் வாசித்தார். கண்ணை மூடிக் கொண்டு கேட்ட அந்த போஸ்ட்மேன் ‘சார், அந்த மூணாவது மெட்டு அருமையாக இருக்கு சார்’ என்று சொல்ல இயக்குனர் திருலோக் முகத்தில் வெற்றிப் புன்னகை. ஆம் அது அவர் தேர்ந்தெடுத்த மெட்டு. ‘ரொம்ப நன்றிப்பா’ என்று போஸ்ட்மேனை அனுப்பி வைத்தனர்.
புன்னகையுடன் பாலாஜியை இயக்குனர் பாலு பார்த்தார். உங்களையெல்லாம் விட மக்கள் ரசனையை நன்கு அறிந்தவன் நான் என்று அந்த போஸ்ட்மேன் தெளிவுபடுத்தி விட்டான்’ என்றார்.
அப்போது கண்ணதாசன் ‘விசு, அந்த போஸ்ட்மேன் செலக்ட் பண்ணிய ட்யூனை வாசி டேய் பஞ்சு (வேறு யார், பஞ்சு அருணாசலம்தான்) நான் சொல்ல சொல்ல எழுதிக்கிட்டே வா’ என்று வழக்கம் போல வரிகளைக் கொட்டத் துவங்கினார்.
கேட்டவரெல்லாம் பாடலாம் என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே சுவையிருக்கும் பாவையரின் கதையிருக்கும்


ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் மலைக்கள்ளன்


கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர். தந்தையை இழந்த பிறகு தாயார் சத்தியபாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார். மக்களின் மனங்களை படித்த எம்.ஜி.ஆரின் பள்ளி வாழ்க்கை மூன்றாம் வகுப்போடு நின்று போனது, 1932ல் எம்.ஜி.ஆரின் குடும்பம் சென்னைக்கு சென்றது.
அங்கு அவர்கள் வசித்த முதல் இடம் யானை கவுனியில் இருக்கும் பங்காரம்மாள் வீதி ஆகும். நாடக உலகில் அறிமுகமாகி கந்தசாமி முதலியாரால் சினிமா உலகிற்கு அறிமுகமானார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் முதன் முதலில் அறிமுகமான படம் சதிலீலாவதி, கதாநாயகனாக அறிமுகமான படம் ராஜகுமாரி.
இருப்பினும் மலைக்கள்ளன் படத்திற்கு பிறகே எம்.ஜி.ஆர் வெற்றி கதாநாயகனாக அறியப்பட்டார். எம்.ஜி.ஆர். சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த காலத்திலேயே அவரது அன்னை சத்தியபாமாவின் கட்டாயத்தால் தங்கமணி என்பவரை மணந்தார்.
அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்துவிட்டார். பின்னர் வீ. என். ஜானகியை மணந்துகொண்டார். துரதிஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.
ஏழு என்ற எண் எம்.ஜி.ஆரின் வாழ்வின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவருடனேயே இணைந்து வந்திருக்கிறது. அவர் பிறந்த திகதியும் வருடமும் ஒன்றே ஆகும். (17.01.1917). எம்.ஜி.ஆர் தனது 7வது வயதில் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் கட்டில் ஏறிய வருடம் 1977 ஆகும். எம்.ஜி.ஆர் மறைந்த வருடம் 1987 ஆகும்.
அதுமட்டுமின்றி ஏழு என்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த எண்ணாகும். அவர் வைத்திருந்த வெள்ளை அம்பாசிடர் காரின் எண் 4777 ஆகும். இதன் கூட்டுத்தொகை 7 ஆகும். எம்.ஜி.ஆர். நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 137. இதில் 115 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்று போன படங்களும் இருக்கின்றன. அதன் பட்டியல் இதோ பவானி, ஊமையன், கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூகமே நான் உனக்கே சொந்தம்.
1951ல் எம்.ஜி.ஆருக்கு கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
1963ல் எம்.ஜி.ஆருக்கு கிருபானந்த வாரியார் ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
1967ல் எம்.ஜி.ஆருக்கு பேரறிஞர் அண்ணா ‘இதயக்கனி’ என்ற பட்டத்தை வழங்கினார். - 1972ல் எம்.ஜி.ஆருக்கு ஏ. கே. கிருஷ்ணசாமி ‘புரட்சித் தலைவர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
எம்.ஜி.ஆர். - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை ‘மலைக்கள்ளன்’ பெற்றது.
இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம்.
‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படத்தில் நடிக்க வேண்டாம்’ என்று அண்ணா கூறியதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர். ‘அடிமைப்பெண்’ பட ஷ¤ட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர் குளிருக்காக வெள்ளைத் தொப்பிவைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்.
அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கைகொடுத்து ‘நான் எம்.ஜி. ராமச்சந்திரன், சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார். முழுக்கை சில்க் சேர்ட், சாரத்துடன், தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கமாக இருந்தது. சினிமா உலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி. ராமச்சந்திரன் 24.12.1987ல் மறைந்தார்.

No comments:

Post a Comment