Wednesday, September 13, 2017

பல்லாக்கு வாங்க போனேன் பாடல் பிறந்த கதை



சாரதா இன்னொரு பாடல் பிறந்த கதையை அனுப்பி இருக்கிறார்.
தன்னிடம் ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பரொருவர் வைத்திருந்த வெளிநாட்டுக்கார் மீது கண்ணதாசனுக்கு ஆவல். நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதைக் கேள்விப்பட்ட கவிஞர், அதைத் தனக்கே தரவேண்டுமென்று விலையும் பேசிவிட்டார். முழுப் பணமும் கொடுக்க கண்ணதாசனிடம் பணமில்லை. எனவே மூன்றில் ஒரு பங்கு பணம் அப்போதே தருவதாகவும், பாக்கியை விரைவில் தந்துவிடுவதாகவும் சொல்ல ந்ண்பரும் சம்மதித்தார். அது முதல் கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே கனவு காணத் துவங்கினார். மறுநாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து வருவதாக ஏற்பாடு.
ஆனால் முதல் நாள் அந்த நண்பரின் மற்ற நண்பர்கள் சிலர், ‘கண்ணதாசன் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப மோசமென்றும், அவருக்கு ஊரைச் சுற்றி நிறைய கடன் இருப்பதாகவும், எனவே நண்பரின் பாக்கிப் பணம் வசூலாவது கடினம்என்றும் சொல்ல நண்பர் உஷாரானார்.
இந்தியாவின் ஜனாதிபதியைப் போல சம்பாதித்து ம்கூட, இந்தியாவைப் போல கடன் வாங்கியவர் கண்ணதாசன்என்று கவிஞரைப் பற்றி ஒரு சொல்வழக்கு உண்டு.
மறுநாள் காலை கவிஞர் குளித்து, உணவருந்திவிட்டு, வண்டியை எடுத்து வர தன் ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குச் செல்ல, நண்பரோ குண்டைத் தூக்கிப் போட்டார். அந்த கார் தனக்கு ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் விருப்பமில்லைஎன்றும் கூற, கவிஞர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். தான் ஆசைப்பட்டு தனதாகவே நினைத்திருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் மனதில் தங்கியிருந்தது.
அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு, இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்த பணக்கார குடும்பம்படத்துக்கு ஒரு சோகப் பாடல் எழுத அமர்ந்த கவிஞருக்கு அன்று காலை நடந்த சம்பவம் மனதைக் குடைய, பல்லவியை இப்படி துவங்கினார்
பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
சூழ்நிலைகளை தன் பாடலுக்குள் புகுத்திக்கொள்வதில் கண்ணதாசன் திறமைசாலித்தான்.

1 comment: